
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-
வெளிநாடுகளில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு வரும் சரக்குகள், புதுச்சேரி துணை துறைமுகத்துக்கு கன்டெய்னர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
பின்னர், அங்கிருந்து தென் மாநிலங்களுக்கும், புதுவை வரும் சரக்குகள் சென்னை துறைமுகத்துக்கு அனுப்புவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, பொன்.ராதா கிருஷ்ணன் முன்னிலையில் கையெழுத்தாகிறது.
சென்னை துறைமுகத்துக்கு வரும் கப்பல்கள், கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் சரக்கை இறக்க 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. அந்த கால கெடுவை குறைக்க புதுச்சேரி துறைமுகத்தை சென்னை துறைமுகத்தின் துணை துறைமுகமாக அங்கீகரித்து இருக்கிறார்கள். இதில் வரும் வருமானம் சரிபாதியாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது. ஆர்.கே. நகரை பொறுத்தவரை, ஆளுங்கட்சி அறிவித்த திட்டங்கள் எதுவும் நிறைவேறவில்லை. எனவே தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு அதிகமாகவும், பிரகாசமாகவும் உள்ளது.
சென்னையில் இருந்து புதுவைக்கு சுற்றுலா பயணிகள் சொகுசு கப்பல் திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறோம். அதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.