
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் 37 சதவீத வாக்குகள் பெற்று டி.டி.வி.தினகரன் வெற்றி பெறுவார் என பாஜக எம்.பி.சுப்ரமணிய்னசுவாமி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுகவின் மருது கணேஷ், அதிமுகவின் மதுசூதனன், சுயேட்சை வேட்பாளரான டி.டி.வி.தினகரன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வந்தது.
இந்த தேர்தல் பரப்புரையின்போது அதிமுக மற்றும் டி.டி.வி.தினகரன் தரப்பினர் இருவரும் , வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாக புகார் எழுந்தது. தேர்தல் நாளான நேற்று அதிகாலையில் கூட வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து நேற்றைய தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு 77.68 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன்தான் வெற்றி பெறுவார் என பாஜக எம்.பி, சுப்ரமணியள்சுவாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், 37 சதவீத வாக்குகளை தினகரன் பெற்றுள்ளார் என்றும், அவரே வெற்றி பெறுவார் என்றும் சுவாமி கூறியுள்ளார்.
ஆனால் இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை யார் எடுத்தது என்ற தகவலை சுப்ரமணியன்சுவாமி தெரிவிக்கவில்லை.
மக்கள் ஆய்வு மையம் என்ற அமைப்பு ஆர்.கே.நகர் தொகுதியில் நடத்திய இரண்டு கருத்துக் கணிப்பிலும் டி.டி.வி.தினகரன்தான் வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.