
சென்னையில் நேற்று இரவு போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சோதனைக்கு தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் இட்டனர். அவர்களில் சுமார் 40 பேரை போலீஸார் கைது செய்தனர். தகவலைக் கேட்டதும் ஓடோடி வந்தார் ஜெயா டிவியை நிர்வகித்து வரும் விவேக் ஜெயராமன். தொடர்ந்து தினகரனும் நள்ளிரவு வரை இருந்து பேட்டி கொடுத்து, தனது அரசியல் கடமை ஆற்றினார்.
சென்னையில் இப்படி களேபரங்கள் நடந்து கொண்டிருக்க, அதன் பின்னர் வழக்கம் போல் தினகரன் எந்த விதப் பதற்றமும் இன்றி தென்னகத்துக்குக் கிளம்பி தனது சமூகக் கடமையாற்றக் கிளம்பி விட்டார். தனது வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனைக்கு வந்தபோது, கோ பூஜை என பசுவுக்கு பூஜை செய்து கொண்டு கூலாக இருந்தார். இப்போதும், நெல்லை தூத்துகுடி மாவட்ட ஆலயங்களுக்குச் சென்று தனது வெகு இயல்பாக இருக்கும் மன நிலையை வெளியில் காட்டிவருகிறார்.
திருநெல்வேலி டவுனில் வ.உ.சி மணி மண்டபத்தில் உள்ள வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார் டிடிவி தினகரன். அவருடன் 300 க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் வந்து நெல்லையைக் கலக்கியடித்தனர். அதன் பின்னர் தினகரன் நெல்லை வஉசி., மணிமண்டபத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தினகரனின் திடீர் நெல்லை தூத்துக்குடி விசிட், அரசியல் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.