போயஸ் ரெய்டு தமிழக அரசியல் பாதையில் புதிய மாறுதல்களையும், சில பூகம்பங்களையும் கொண்டு வரும் போலிருக்கிறது. குறிப்பாக தினகரன் அணி இந்த ரெய்டை தொட்டு பி.ஜே.பி.யை நேரடியாக தாக்கி களமிறங்கியிருப்பதன் மூலம் மக்கள் மத்தியில் அதன் ஆளுமை கவனிக்கத்தக்கதாக மாறியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தினகரன் எத்தனை சவடாலாக பழனிசாமியையும், பன்னீரையும் விமர்சனம் செய்தாலும் கூட பி.ஜே.பி.யை சாடாமல்தான் இருந்தார் இது நாள் வரை. சமீபத்தில் கூட “குருமூர்த்தி ஆரம்பத்திலிருந்து எங்களுக்கு எதிராக எழுதிக்கொண்டிருக்கிறார். அவர் தான் நினைப்பதெல்லாம் தமிழ்நாட்டில் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவர் ஆர்.எஸ்.எஸ்.காரராக இருக்கலாம். பி.ஜே.பி.க்கு வேண்டியவராக இருக்கலாம். ஆனால் அதற்காக அவர் நினைப்பதை எப்படி தமிழ்நாட்டு மக்கள் கேட்பார்கள்?” என்று தலையை சுற்றித்தான் மூக்கை தொட்டுக் கொண்டிருந்தார் தினா.
ஆனால் இன்று போயஸில் நடக்கும் ரெய்டு அவரை நேரடியாகவே பி.ஜே.பி.யை தாக்க துணிந்திருக்கிறது. போயஸ் ரெய்டை எதிர்த்து முற்றுகையிட சென்ற அவரது ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தப்பட, அடுத்த சில நிமிடங்களில் ‘பி.ஜே.பி. ஒழிக’ என்று எழுதப்பட்ட பேனருடன் வந்து நிற்கிறார்கள். அந்த அணியின் தலைமை வழிகாட்டியபடிதான் இந்த விமர்சனம் பி.ஜே.பி.க்கு எதிராக பாய்ந்திருக்கிறது.
ஆக இனி தினகரனின் அரசியல் பி.ஜே.பி.க்கு எதிராக முழு உத்வேகத்துடன் இருக்கும் என்கிறார்கள். சமீபத்தில் “இதுவரை எந்த அடிப்படை ஆதாரமுமில்லாமல் நான் பி.ஜே.பி.யை நேரடியாக தாக்கிப் பேசவில்லை. ஆனால் ஆளும் கட்சியை சேர்ந்தவரும், அரசியல் பிரமுகருமான அம்பிகாபதி, ஃபாஸ்ட் டிராக் என்கிற கால் டாக்ஸி நிறுவனத்தை நடத்துகிறார். இவருக்கு பன்னீர்செல்வத்துடன் பெரும் நெருக்கம் உண்டு. எப்போதும் அவரோடு இருப்பார். அப்பேர்ப்பட்டவரின் நிறுவனத்தை சேர்ந்த 350 கார்களை ரெய்டுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். எத்தனையோ நிறுவனங்கள் இருக்கும்போது பன்னீரின் நண்பர் நிறுவத்தை சேர்ந்த 350 கார்களை பயன்படுத்தியது ஏன்? இப்போது பகிரங்கமாக கேட்கிறேன், குற்றம்சாட்டுகிறேன் இது பி.ஜே.பி.யின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான்.” என்று மெதுவாக பேசிக் கொண்டிருந்த தினகரன் இப்போது பி.ஜே.பி.க்கு எதிராக உச்சஸ்தாயில் பேச துவங்கிவிட்டார்.
பொதுவாக தமிழகத்தை பொறுத்தவரையில் ரெய்டு என்றாலே அதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று நினைப்பார்கள். அது மத்தியில் யார் இருந்தாலும் சரி.
இபோது ஜெயலலிதாவின் இல்லத்தில் நிகழ்ந்துள்ள ரெய்டின் மூலம் ‘பாவம் அந்தம்மாவே இறந்துபோயிட்டாங்க. அங்கே ரெய்டு நடத்தி என்னத்த பண்ண போறாங்க?’ என்று ஒரு அனுதாப அலை எழ துவங்கியிருக்கிறது. கூடவே பி.ஜே.பி.க்கு எதிராக ஒரு கடுப்பு அலையும் வீச துவங்குவது வாடிக்கை.
இந்த சூழலில் தினகரன் அணி பி.ஜே.பி.க்கு எதிராக இயங்க, பேச, விமர்சிக்க துவங்கியிருப்பது அந்த அணி இந்த வாய்ப்பை தனக்கு முழு சாதகமாக பயன்படுத்த முடிவெடுத்திருப்பதை காட்டுகிறது.
அரசியல்டா!