டிடிவி.தினகரனின் அதிரடி கோரிக்கை... உடனடியாக நிறைவேற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!

By vinoth kumarFirst Published Jun 18, 2020, 1:03 PM IST
Highlights

முழு ஊரடங்கு நாளை முதல் அமலாகவுள்ள நிலையில் சென்னை உட்பட 4 மாவட்ட பகுதிகளில் அம்மா உணவகங்களில்  இலவசமாக உணவு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முழு ஊரடங்கு நாளை முதல் அமலாகவுள்ள நிலையில் சென்னை உட்பட 4 மாவட்ட பகுதிகளில் அம்மா உணவகங்களில்  இலவசமாக உணவு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வரும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளை முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட உள்ள 4 மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முதல்வருக்கு வலியுறுத்தியிருந்தார். 

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:- தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு, ஏழை ஏளிய மக்களின் நலன் கருதி, அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவு விலையில்லாமல் 31.5.2020 வரை வழங்கப்பட்டு வந்தது. தற்போது சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் தீவிர ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், இப்பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லாமல் உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், முதியோர், நோயுற்றோர் மற்றும் ஆதரவற்றோர்களின் நலன் கருதி, தற்போது இயங்கி வரும் சமுதாய உணவுக்கூடங்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு அவர்களின் இல்லங்களுக்குச் சென்று விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ள இந்நிலையில், இப்பகுதிகளில் உள்ள சமுதாய சமையல் கூடங்களை மேலும் வலுப்படுத்தி, போதுமான அளவு உணவு சமையல் செய்து, இந்த உணவை, விலையில்லாமல், தேவைப்படும் முதியோர், நோயுற்றோர் மற்றும் ஆதரவற்றோர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை  முதல் 30ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

click me!