
போயஸ் இல்லத்தில் திதி கொடுப்பதை தடுக்க முயன்றவர்கள், வருமான வரி சோதனை நடந்ததை ஏன் தடுக்க முயற்சிக்கவில்லை என்றும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அவரது மறைவுக்குப் பிறகு அரசுடமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் போயஸ் தோட்ட இல்லத்துக்குள் அதிரடியாக நுழைந்த வருமான வரித்துறையினர் சசிகலாவின் 5 அறைகள், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் அறை என சல்லடை போட்டு சலித்தனர்,
இதில் பென் டிரைவ், லேப்டாப், ஹார்டுடிஸ்க் என பல முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து வேதா இல்லத்தில் உள்ள 6 அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று திடீரென போயஸ் கார்டன் பகுதியில் போலீஸ் குவிக்கப்படடது. டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் போயஸ் கார்டனை முற்றுகையிடப் போவதாக தகவல் வந்ததையடுத்து போலீஸ் குவிக்கப்பட்டது.
இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வெற்றிவேல், முன்னாள் அமைச்சர் செந்தமிழன், கலைராஜன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் போய்ஸ காட்னை முற்றுகையிட்டு உள்ளே நுழைய முயன்றனர்.
மறைந்த ஜெயலலிதாவுக்கு மாதாமாதம் செய்யக்கூடிய சடங்குகள் செய்ய தங்களை அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் வருமான வரி சோனை நடைபெற்று அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதால் யாரையும் உள்ளே விடமுடியாது என போலீசார் தெரிவித்தனர். திதி நடத்த புரோகிதர்களை மட்டுவது உள்ளே அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கேட்டதற்கு அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
இது தொடர்பாக டிடிவி தினகரன், செய்தியாளர்களிடம் பேசும்போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மாதா மாதம் புரோகிதர்களை வைத்து திதி கொடுப்பது வழக்கம் என்றும் அதன் அடிப்படையில் வரும் 5 ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவுநாள் வருவதால் இன்று திதி கொடுக்க வந்த புரோகிதர்களை அனுமதிக்க போலீசார் மறுத்து விட்டதாகவும் தினகரன் கூறினார்.
திதி கொடுப்பதை தடுக்க முயன்றவர்கள், போயஸ் இல்லத்தில் சோதனை நடந்ததை ஏன் தடுக்க முயற்சிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். போயஸ் தோட்ட இல்லத்தில் 2 அறைகளில் மட்டுமே சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தினகரன் கூறினார்.