அந்நிய செலாவணி வழக்கில் டிடிவி தினகரன், சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
1996 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து தொலைகாட்சி மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் வாங்கியதில் மோசடி செய்ததாக சசிகலா, டிடிவி தினகரன், அவரது உறவினர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்தது.
இது தொடர்பான வழக்கு கடந்த 20 ஆண்டுகளாக சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் டிடிவி தினகரனை விடுவித்தது. ஆனால், கீழ்மை நீதிமன்றங்களின் இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தினகரனை தொடர்ந்து விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்த வழக்கு விசாரணையின்போது, நிறுவனங்கள் மூலம் மட்டுமே பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதாகவும், தனி நபர் பரிவர்த்தனை எனவும் தினகரன் தரப்பு வாதிட்டது.
தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கில் அமலாக்கத்துறை உரிய விளக்கம் தர வேண்டும் என எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கு உத்தரவிட்டது. மேலும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் டிடிவி தினகரன் இன்று எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். இன்னும் சிறிது நேரத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.