சிறுபான்மையினரின் காவலன் சொல்லிக்கொண்ட இரட்டை வேடம் ஸ்டாலின்.. திமுக முகத்திரையை கிழிக்கும் டிடிவி..!

By vinoth kumarFirst Published Dec 5, 2021, 1:40 PM IST
Highlights

ஒரு சிலரின் சுயநலத்தால் தன் தனித்தன்மையையும், அடையாளத்தையும் இழந்துவிட்ட நிலையில், நம் தலைவர்களின் லட்சியங்களை  "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்"  எனும் ஜனநாயக ஆயுதம் கொண்டு மீட்டெடுத்தே தீருவோம் என  இந்நாளில் நாம் உறுதி ஏற்கிறோம்.

ஒரு சிலரின் சுயநலத்தால் தன் தனித்தன்மையையும், அடையாளத்தையும் இழந்துவிட்ட நிலையில், நம் தலைவர்களின் லட்சியங்களை அமமுக எனும் ஜனநாயக ஆயுதம் கொண்டு மீட்டெடுத்தே தீருவோம் என டிடிவி. தினகரன் சூளுரைத்துள்ளார். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுத் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் மலரஞ்சலி வைத்து மரியாதை செய்தனர். இதனைத் தொடர்ந்து அமமுக பொதுச் செயலாளர் தினகரனும் தொண்டர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் உறுதிமொழி ஏற்றனர்.

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அன்புக் கட்டளையினை ஏற்று, பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்து, தமிழக மக்களின் நலன்களையே முதன்மையாகக் கொண்டு புது வரலாற்றைப் படைத்துக்காட்டி, சாதனைகளின் சிகரமாக, திராவிட இயக்கத்தின் மணிமகுடமாக, பன்னாட்டுத் தலைவர்கள் போற்றிய மாபெரும் ஆளுமையாக திகழ்ந்த நம் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் துயில்கொள்ளும் இப்புனித நினைவிடத்தில், தியாகத்தலைவி சின்னம்மா நல்வாழ்த்துகளோடு, கழக  பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் ஆற்றல் நிறைந்த தலைமையில் வீறுநடைபோடும் நாம், மாண்புமிகு அம்மா அவர்களின் லட்சியங்களை வென்றெடுத்திட உளப்பூர்வமாக உறுதி மொழி ஏற்போமாக... 

1.    "மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என்ற வைர வரிகளை, தன் வைராக்கிய வாழ்க்கையாகக் கொண்டு, அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தவ வாழ்வாக தன் வாழ்வை அமைத்து, "அம்மா" என்கிற அன்புச்சொல்லால், தமிழக வரலாற்றிலும், தமிழ்நாட்டு மக்களின் இதயங்களிலும் என்றும் நிலைத்திட்ட நம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய பாதையில், "மக்களோடு நாம் மக்களுக்காக நாம்" என்கிற தாரக மந்திரத்தோடு தொடர்ந்து பயணிக்க, மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாகிய நாம் இந்நாளில் உறுதி ஏற்கிறோம்.

2.    சோதனை சூறாவளிகள் சுழன்று வரும்போதெல்லாம் அதனை எதிர்த்து நின்றிடும் உறுதி கொண்ட இதயமாக, அடக்குமுறைகள் ஆயிரம் வழிகளில் வந்தாலும், துணிச்சலின் வடிவமாக நின்று அவற்றை எதிர்த்து, மாண்புமிகு அம்மா அவர்களின் லட்சியங்களையும், கழகத் தொண்டர்களையும் காத்து நிற்கும் வீரப்போராளி, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் நம்முடைய அண்ணன்,  கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் வீரத்தோடும், விவேகத்தோடும், வேகத்தோடும் பணியாற்றி துரோகிகளையும், தீயசக்திகளையும் வீழ்த்தி வெற்றிகளைக் குவித்திடுவோம்  என நாம் உறுதி ஏற்கிறோம்.

3. தீயசக்திகளிடமிருந்து அன்னை தமிழகத்தைக் காத்திட, நம் புரட்சித்தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டு, நம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கட்டி காக்கப்பட்ட இயக்கம், ஒரு சிலரின் சுயநலத்தால் தன் தனித்தன்மையையும், அடையாளத்தையும் இழந்துவிட்ட நிலையில், நம் தலைவர்களின் லட்சியங்களை  "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்"  எனும் ஜனநாயக ஆயுதம் கொண்டு மீட்டெடுத்தே தீருவோம் என  இந்நாளில் நாம் உறுதி ஏற்கிறோம்.

4.    தமிழ்நாட்டின் உரிமைகளை தங்கள் சுயலாபத்துக்காக காவு கொடுப்பதையும், மக்கள் விரோத செயல்களையும் கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த போதெல்லாம் வழக்கமாக செய்து வந்த தீய சக்தியான தி.மு.க., தற்போதும் முல்லைப் பெரியாறு, நீட் தேர்வு, 7 தமிழர் விடுதலை உள்ளிட்ட பிரச்னைகளில் போடும் இரட்டை வேடத்தையும், சிறுபான்மையினரின் காவலன் என்று சொல்லிக்கொண்டே 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமியர்கள் விடுதலையாக முடியாதபடி அரசாணை பிறப்பித்திருப்பதையும், எதிர்க்கட்சியாக இருந்தபோது, எதிர்த்த பல திட்டங்களை ஆளுங்கட்சியான பிறகு செயல்படுத்த துடிப்பதுமான தி.மு.க.வின் ஏமாற்று வித்தைகளை மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டுவோம். தமிழகத்திற்கான நலன்களைப் பாதுகாக்கவும், உரிமைகளை மீட்டெடுக்கவும் மாண்புமிகு அம்மா அவர்களை இதயத்தில் தாங்கிய ஜனநாயக போர் வீரர்களாக செயல்படுவோம் என இந்நாளில் உறுதி ஏற்கிறோம். 

5.    புரட்சித்தலைவரின் நல்லாசியுடன் சரித்திர வெற்றிகள் பல படைத்த நம் இதயதெய்வம் அம்மா அவர்கள், திராவிட இயக்கத்தின் கொள்கையான சமூக நீதியை நிலைநாட்டி, 69 சதவீத இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக பெற்றுத்தந்ததோடு, தமிழகத்தின் உரிமைகள், தமிழ் மொழி மற்றும் தமிழக மக்களின் மேன்மை, இலங்கைத் தமிழர்களின் சுதந்திர வாழ்வு என்று அனைத்திற்கும் உரிமைக்குரல் எழுப்பிய அதே பாதையிலேயே நாமும் பயணித்து, அம்மா அவர்களின் அடியொற்றி அனைத்து மக்களின் நலனையும் பாதுகாத்திட தொடர்ந்து பாடுபடுவோம் என இந்நாளில் நாம் உறுதி ஏற்கிறோம்.

6.    இந்திய துணைக்கண்டத்தில் எந்த இயக்கத்திற்கும் ஏற்படாத சோதனைகள் அனைத்தையும் சந்தித்தபடியே நெஞ்சுரத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறோம். அம்மா என்ற பேரடையாளத்தை தாங்கிய இப்படையில் உள்ள நாம், தடைகளைத் தகர்த்து தொடர்ந்து முன்னேறிக் கொண்டே செல்வோம். “உண்மை என்பது என்றும் உள்ளது, தெய்வத்தின் மொழியாகும், நன்மை என்பது  நாளை வருவது, நம்பிக்கை ஒளியாகும்” என்ற உணர்வு கொண்டு, கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  தலைமையில் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, மாண்புமிகு அம்மா அவர்களின் கம்பீரமான நல்லாட்சியை தமிழ்நாட்டில் அமைப்பதற்காக ஒவ்வொரு நாளும் உழைத்திடுவோம் என்று புரட்சித்தலைவி அம்மா துயில்கொள்ளும் இப்புனித தலத்தில் வீர சபதத்தை ஏற்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார். 

click me!