ஜெயலலிதா இல்லை என்பதால் இப்போதே ஆட்சியைப் பிடித்துவிட்டதாக நினைத்து கற்பனை ராஜ்ஜியத்தில் மிதக்கும் ஸ்டாலின் கனவு ஒரு நாளும் பலிக்கப் போவதில்லை என்று டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
ஜெயலலிதா இல்லை என்பதால் இப்போதே ஆட்சியைப் பிடித்துவிட்டதாக நினைத்து கற்பனை ராஜ்ஜியத்தில் மிதக்கும் ஸ்டாலின் கனவு ஒரு நாளும் பலிக்கப் போவதில்லை என்று டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- நாகரிக அரசியலுக்கும் தி.மு.கவுக்கும் எந்தக் காலத்திலும் சம்பந்தம் இருந்ததில்லை என்பதை மு.க.ஸ்டாலினும், ஆ.ராசாவும் கடந்த சில நாட்களாக மீண்டும் நிரூபித்து வருகிறார்கள். தமிழ்நாட்டின் நிர்வாகத்தைச் சீர்குலைத்த பல ஊழல்களின் ஊற்றுக்கண்ணான, ஊழலின் பிதாமகரான கருணாநிதியின் வாரிசுகள், அவர்களைப் பற்றி உலகமே அறிந்த சங்கதிகளை வீராவேசமாக பேசுவதால் மட்டுமே மறைத்துவிட முடியும் என நினைக்கிறார்கள்.
சர்க்காரியாவில் இருந்து தப்பிக்க கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது யார்? 2 ஜி-யில் இருந்து தப்பிக்க லட்சோப லட்சம் தமிழ் சொந்தங்களை இலங்கையில் கொன்றழிக்க துணை நின்றது யார்? இப்படி ஊழல், நயவஞ்சகம் இவற்றின் மொத்த வடிவங்களான இவர்களுக்கு, தமிழக மக்களுக்காக தவ வாழ்க்கை வாழ்ந்து, இன்றும் அவர்களின் உள்ளங்களில் நிறைந்திருக்கிற ஜெயலலிதாவை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?
தேர்தல் ஜூரம் ஆரம்பித்துவிட்டதால் ஸ்டாலின், இனி கைத்தடிகளைத் தூண்டிவிட்டு இப்படியெல்லாம் பேச வைப்பார். ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் இந்த உலக மகா யோக்கியசிகாமணிகள், ஜெயலலிதாவின் மரணத்தைப் பற்றியும் வழக்கம் போல ‘ரொம்பவும் அக்கறை உள்ளவர்கள்' போன்று அவதூறு பரப்பி குளிர்காய நினைப்பார்கள். இவர்களின் மலிவான பிதற்றல்களைப் பார்த்து தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்.
இதுபோன்று வரம்பு மீறி, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதாலும், அதிகாரத்தில் இருக்கும் போது போட்ட ஆட்டங்களாலும்தான் கடந்த 10 ஆண்டுகளாக இந்த தீயசக்திகளை தமிழ்நாட்டு மக்கள் ஓரங்கட்டி வைத்திருக்கிறார்கள். வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலிலும் அதுதான் நடக்கப்போகிறது. ஜெயலலிதா இல்லை என்பதால் இப்போதே ஆட்சியைப் பிடித்துவிட்டதாக நினைத்து கற்பனை ராஜ்ஜியத்தில் மிதக்கும் இவர்களின் கனவு ஒரு நாளும் பலிக்கப் போவதில்லை.
அதிர்ஷ்டத்தால் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டு, நாளைக்கு அடையாளமில்லாமல் போகப் போகிறவர்கள் வேண்டுமானால் இவர்களின் எகத்தாளத்தையும், இழிச்சொற்களையும் கண்டும் காணாமலும் இருக்கலாம். ஏனெனில் ஜெயலலிதாவை அசிங்கப்படுத்தும் இந்த தீயசக்திகளோடு 60:40 ஒப்பந்தம் போட்டு செயல்படுபவர்கள், ‘நீ அடிப்பது போல அடி; நான் அழுவது போல அழுகிறேன்' என்று பேசி வைத்துக்கொண்டே இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்.
ஆனால், தீயசக்தி கூட்டத்திற்கு சிம்ம சொப்பனமான ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட உண்மையான பிள்ளைகளான அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்களாகிய நாங்கள் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். அதனால் ஸ்டாலினும், ராசா போன்றவர்களும் பேசுவதற்கு முன் யோசித்து நாகரிகமாக பேசுவது நல்லது என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்கிறேன் என தினகரன் கூறியுள்ளார்.