ரூ.10க்கு சிகிச்சை... விட்டுக்கொடுத்த வாடகை... பட்டு மனம் கொண்ட பட்டுக்கோட்டை டாக்டருக்கு குவியும் பாராட்டு..!

By Thiraviaraj RMFirst Published Jun 10, 2020, 3:37 PM IST
Highlights

பட்டுக்கோட்டையின் அதிசய டாக்டர் ரத்னம் 1957ல் மருத்துவ பணி தொடங்கும் போது வாங்கிய பீஸ் ரூ.2.  1997- க்கு பிறகு ரூ 5. 2007க்கு பிறகு இன்று வரை ரூ 10 மட்டுமே... 

பட்டுக்கோட்டையின் அதிசய டாக்டர் ரத்னம் 1957ல் மருத்துவ பணி தொடங்கும் போது வாங்கிய பீஸ் ரூ.2.  1997- க்கு பிறகு ரூ 5. 2007க்கு பிறகு இன்று வரை ரூ 10 மட்டுமே... இதுவரை பட்டுக்கோட்டையில் பார்த்த பிரசவம் 65,000 தமிழ்நாட்டில் அதிக பிரசவம் பார்த்த ஆண் டாக்டர் இவர்தான்.  தன் வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு 3 மாத வாடகை 4.20 லட்சம் ரூபாய் வேண்டாம் என்று விட்டுக் கொடுத்துள்ளார் பட்டுக்கோட்டை டாக்டர் கனகரத்தினம்.

ஊரடங்கால் வியாபாரிகள் படும் சிரமம் உணர்ந்து இந்த உதவி செய்ததாக சொல்லும் இவர் பல வருடமாக 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வருகிறார்.  கொரோனா காலத்தில் ஊரடங்கால் வருமானம் இல்லாமல் தவிக்கும் கடை வியாபாரிகளிடம் பட்டுக்கோட்டை டாக்டர் கூறிய வார்த்தை பலரையும் நெகிழ வைத்துள்ளது.

பட்டுக்கோட்டையில் டாக்டர் ஒருவர் தனக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் கொரோனா ஊரடங்கால் கடைகள் திறக்காமல் போனதில் வருமானம் இல்லாமல் தவித்ததைக் கவனித்துள்ளார். இதையடுத்து, அவர்களிடம் மூன்று மாதவாடகை தர வேண்டாம் எனக் கூறி நெகிழ வைத்திருக்கிறார்.
 
பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே உள்ள பெரிய தெருவில் கிளினிக் நடத்தி வருபவர் மூத்த டாக்டர் கனகரத்தினம். இவருக்கு வயது 91. இவருடைய மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு மூன்று மகள்கள் ஒரு மகன். மகள்களுக்குத் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். மகன் சுவாமிநாதன் மற்றும் மருமகள் வர்ஷா சுவாமிநாதன் ஆகியோரும் டாக்டராக உள்ளனர்.

இந்த நிலையில், தனது கிளினிக் அமைந்துள்ள இடத்தில் 6 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார் ரத்தினம். இதில் துணிக்கடை, காலணிகள் உள்ளிட்ட கடைகளை வியாபாரிகள் வைத்துள்ளனர். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு அமலில் உள்ளதால் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் கடை வைத்திருப்பவர்கள் அனைவரும் வருமானம் இழந்து தவித்துள்ளனர். இதனை உணர்ந்த மருத்துவர் ரத்னம் கடைகளுக்கான 3 மாத வாடகை பணத்தையும் கொடுக்க வேண்டாம் எனக் கூறி நெகிழ வைத்துள்ளார். இந்தத் தகவல் வெளியாகி பொதுமக்கள் மருத்துவரின் மனிதாபிமானம் குறித்து பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். 

click me!