சென்னை மெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் தடுப்பூசி சேமிப்பு கிடங்கில் இருந்து, தமிழகத்திற்கு உடனடியாக 2 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலையில் இருந்து மக்களை காக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் தயக்கம் வந்த மக்கள் கூட, தடுப்பூசி மட்டுமே கொரோனாவை எதிர்க்க சரியான ஆயுதம் என்பதால் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. அதேபோல் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இப்படி தடுப்பூசி செலுத்த மக்களிடையே ஆர்வம் இருந்தாலும் தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருந்ததன் காரணமாக பல இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டினாலும் தற்போது கையிருப்பில் வெறும் 88 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே இருப்பதால், இன்றைய தினம் சில மணி நேரங்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தும் பணி தொடரும் என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு குறைவாக தடுப்பூசிகளை கொடுப்பதால் தான் தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை இயங்க அனுமதித்தால் தட்டுப்பாடின்றி தடுப்பூசி கிடைக்கும் என்றும், ஜூலை மாதத்தில் 71 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டதால் சென்னை மெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் தடுப்பூசி சேமிப்பு கிடங்கில் இருந்து, தமிழகத்திற்கு உடனடியாக 2 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் நாளை முதல் மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.