
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21 ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களின் பட்டியல் இன்று மால் வெளியிடப்படுகிறது. டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட 29 பேர் தொப்பி சின்னத்தை கேட்டு மனு செய்துள்ளநிலையில் இன்று அந்த சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என தெரியவரும்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் மாலை 3 மணியுடன் முடிவடைந்தது.
இதில் மொத்தம் 131 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஷால் மற்றும் ஜெ.தீபா ஆகியோரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த மனுக்கள் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் சரிபார்க்கப்பட்டது.
இதனிடையே வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று கடைசி நாளாகும். வேட்புமனுவை வாபஸ் பெற மாலை 3 மணி வரை அவகாசம் உள்ளதால், அதற்கு பிறகு ஆர்.கே.நகரில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியலை தேர்தல் கமிஷன் இன்று மாலை வெளியிட உள்ளது.
இந்நிலையில் வேட்புமனு ஏற்கப்பட்டவர்களில் தினகரன் என்ற பெயரில் 4 பேரும், மதுசூதனன் என்ற பெயரில் 3 பேரும் போட்டியிடுகின்றனர்.
கடந்த முறை அதிமுக அம்மா அணி சார்பில் டி.டி.வி.தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார். தற்போது சுயேட்சையாக போட்டியிடும் டி.டி.வி.தினகரன் தொப்பி சின்னம் கேட்டு விருப்ப மனு அளித்துள்ளார். தொப்பி சின்னத்தை தனக்கே ஒதுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என டில்லி ஐகோர்ட்டிலும் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த கோரிக்கையை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்றம், கின்னத்தை ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் தொப்பி சின்னம் கேட்டு தினகரன் உட்பட 29 பேர் மனு அளித்துள்ளனர். இதனால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுபவருக்கே தொப்பி சின்னம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்ததது. இதையடுத்து இன்று அதற்கான நடைமுறைகள் செய்யப்படவுள்ளது.
இதில் யார் தொப்பி போடப் போறாங்க என்பது இன்று மாலை தெரியவரும் !!!