#BREAKING இன்று மாலை 4.30 மணிக்கு தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு... தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 26, 2021, 11:34 AM IST
Highlights

டெல்லியில் உள்ள இந்திய தலைமை ஆணையத்தில் பத்திரிகையாளர்களை நேரடியாக சந்தித்து சட்டமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார். 

தமிழகத்திற்கான சட்டமன்ற தேர்தல் தேதி இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளன. தமிழகத்தில் தேர்தல் களம் கடந்த சில மாதங்களாகவே சூடுபிடித்துள்ளது. தேர்தல அறிக்கை தயாரிப்பு, தொகுதி பங்கீடு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, பிரச்சாரம், பொதுக்கூட்டம், அதிரடி அறிவிப்புகள் என விறுவிறுப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. 

அதே சமயத்தில் 5 மாநிலத்திற்கும் தேர்தல் தேதியை விரைவில் அறிவிக்க வேண்டும் என்பதால் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஏற்கனவே நேரில் ஆய்வு நடத்தினர். தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்தயாரிப்புப் பணிகள், தேர்தல் அட்டவணையை இறுதி செய்வது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் டெல்லியில் இரு தினங்களுக்கு முன்பு ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது. 

அப்போது கொரோனா நேரத்தில் பாதுகாப்பாக தேர்தலை நடத்துவது, பதற்றமான வாக்குச்சாவடிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிடுகிறார். டெல்லியில் உள்ள இந்திய தலைமை ஆணையத்தில் பத்திரிகையாளர்களை நேரடியாக சந்தித்து சட்டமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார். 
 

click me!