20 லட்சம் பேர் எழுதும் பிரமாண்டமான TNPSC  குரூப்-4 தேர்வு…. நாளை நடைபெறுகிது !!

First Published Feb 10, 2018, 9:14 AM IST
Highlights
TNPSC group 4 exam will be held tommorrow


தமிழகத்தில் 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேர் எழுதும் மிகப் பிரமாண்டமான TNPSC  குரூப்-4 எழுத்துத் தேர்வு நாளை நடைபெறவுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவியில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ)- 494 காலி பணியிடம், இளநிலை உதவியாளர்(பிணையமற்றது)-4096, இளநிலை உதவியாளர்(பிணையம்)-205, வரிதண்டலர்(கிரேடு 1)-48, நில அளவர்- 74. வரைவாளர் 156, தட்டச்சர்-3463, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3)- 815 உள்ளிட்ட 9351 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த நவம்பர் 14ம் தேதி  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என்று சுமார்  20 லட்சத்து 83 ஆயிரத்து 152 பேர் விண்ணப்பித்தனர்.

இதையடுத்து  தேர்வாணைய வரலாற்றில் 20½ லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்கும் குரூப்-4 தேர்வு நாளை நடைபெற உள்ளது. 1¼ லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் பங்களிப்புடன் இந்த தேர்வு நடக்கிறது.


மொத்தம் 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். தமிழகம் முழுவதும் 301 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

சென்னையில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 120 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இந்த தேர்வை கண்காணிக்க 685 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. தேர்வர்களின் பெயர், புகைப்படம், பதிவு எண், விருப்பப்பாடம், தேர்வுக்கூடத்தின் பெயர் ஆகிய தனிப்பட்ட விவரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ள விடைத்தாள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் முறைகேடுகள், தவறுகள் குறைவதுடன், தேர்வு முடிவுகள் வெளியிட தேவையான கால அவகாசமும் குறையும்.



நுழைவுச்சீட்டில் தெரிவித்துள்ளபடி தேர்வர்கள் வினாத்தாளில் விடையினை குறித்தல் தடை செய்யப்பட்டு உள்ளது. தேர்வுத்தாளில் விடையளிக்காமல் விடப்பட்டுள்ள கட்டங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு குறிப்பிடும் வகையில் புதிதாக ஒரு காலம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு தேர்வு நேரத்திற்கு பிறகு 5 நிமிடம் கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.



தேர்வுக்கூடங்களில் இருந்து தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நேரத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் மின்வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



தேர்வு கூடங்களுக்கு தேர்வர்கள் எளிதில் சென்றுவரும் வகையில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து துறையினருக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்  மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

click me!