உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை... தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published May 2, 2021, 8:05 AM IST
Highlights

தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. குறைந்த பட்சம் 14 சுற்றுகள் முதல் அதிகபட்சம் 30 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற வாய்ப்புள்ளது. சரியாக 11 மணிக்கு மேல் எந்த கட்சி முன்னிலை வகிக்கிறது என்பது சரியாக தெரியும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. கொரோனா 2வது அலை காரணமாக வாக்கு எண்ணிக்கைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே கட்சித் தொண்டர்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி தொண்டர்கள் கூடலாம் என்பதால் வாக்கு எண்ணும் மையங்கள் தவிர, கட்சி அலுவலகங்கள், முக்கிய சாலைகள் ஆகியவற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

உத்தரவை மீறி கொண்டாட்டங்களில் ஈடுபடும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதைத் தடுப்பதற்காக, தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் உள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவத்தினர், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, உள்ளூர் போலீசார் என 50 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சென்னையைப் பொறுத்தவரை  லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி உள்ளிட்ட 4 வாக்கு எண்ணும் மையங்களில், 4 அடுக்கு பாதுகாப்புடன், 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

click me!