திமுகவினர் மட்டும் சந்தோசமாக இருக்கணும்.. மக்களை திசை திருப்பும் மு.க ஸ்டாலின் - அதிரடியில் இறங்கிய அண்ணாமலை

By Raghupati RFirst Published May 26, 2023, 8:04 AM IST
Highlights

அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடாமல், திமுகவினர் நடத்தும் தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் என்று குற்றஞ்சாட்டி உள்ளார் அண்ணாமலை.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வந்ததிலிருந்து இரண்டு ஆண்டுகளாக, திமுகவினர் நடத்தும் தனியார் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அரசு நிறுவனங்களைப் புறக்கணித்து வரும் திமுக, தற்போது தொடங்கியிருக்கும் புதிய நாடகம் தமிழகத்தில் அமுல் நிறுவனம் வருவதைத் தடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதப்பட்ட கடிதமும் ஆவின் நிறுவனம் மீதான போலி அக்கறையை வெளிப்படுத்தி உள்ளது.

முதலில் தனியார் நிறுவனத்திடம் இருந்து இனிப்புப் பெட்டிகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் இட்டிருந்த திமுகவின் இரட்டை வேடத்தை, தமிழக பாஜக முற்றிலும் அம்பலப்படுத்தியதால், வேறு வழியின்றி, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, ஆவின் நிறுவனத்திடம் இருந்து இனிப்புகள் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை முதல்வர் மு. க. ஸ்டாலின் மறந்து விட்டாரா? பாலூட்டும் தாய்மார்களுக்கான சத்துணவு தொகுப்பு ஏலத்தில், சத்துப்பால் பொடி தயாரிக்க ஆவின் முன்வந்த போதிலும் அதை பரிசீலிக்காமல், தனியார் நிறுவனத்துக்குத் தாரை வார்ப்பதை திமுக அரசு மறுக்க முடியுமா?

தமிழ்நாட்டில் தினமும் 244 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படும் நிலையில், ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்வது தினமும் 35 லட்சம் லிட்டர் மட்டுமே. அதாவது மாநிலத்தின் மொத்த பால் உற்பத்தியில், வெறும் 14% மட்டுமே, அரசு நிறுவனமான ஆவின் கொள்முதல் செய்கிறது. மேலும் 2021 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு சராசரியாக பால் கொள்முதல் 32 லட்சம் லிட்டராக குறைந்துள்ளதாகப் புகார்கள் உள்ளன.

அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடாமல், திமுகவினர் நடத்தும் தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படும். முதல்வர் ஸ்டாலின் மக்களின் கவனத்தை திசை திருப்ப அரசு நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். 

பால் கொள்முதலை தினசரி அதிகரித்து, பால் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், ஆவின் நிறுவனத்தை மேலும் திறம்பட செயல்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், வழக்கமான திசைதிருப்புதல் நாடகங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று முதல்வரை தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

click me!