டெங்கு பிரச்னையை பின்னுக்குத் தள்ளி நடிகர் விஜய் நடித்த மெர்சல் படம் இப்போது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு அடித்தளம் இட்டவர் ராகுல் காந்தி.
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, இன்று காலை தனது டிவிட்டரில் ஒரு கருத்தைப் பதிவு செய்தார்.
அதில், மிஸ்டர் மோடி, சினிமா என்பது தமிழ்க் கலாசாரம் மற்றும் மொழியின் ஆழமான வெளிப்பாடு. மெர்சல் படத்திற்கு இடையூறு செய்வதன் மூலம்
தமிழின் பெருமையை சீர்குலைக்க வேண்டாம் - என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார். இதற்கு அரசியல் மட்டத்தில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி தொடர்பான அரசியல் இயக்கத்தினர் அவருக்கு ஆதரவுக்குரல் எழுப்பிய அதே வேளையில், தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஒரு பிடி பிடித்திருக்கிறார்.
அவர் இது குறித்து ஒரு தொலைக்காட்சியில் கருத்து தெரிவித்த போது, ராகுல் காந்தி தமிழகத்தில் இந்த சிறிய விஷயத்தில் அரசியல் குளிர் காய்கிறார், அரசியல் லாபம் பார்க்கப் பார்க்கிறார் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ஜி.எஸ்.டி., என்பது, அரசின் பல்லாண்டு கால உழைப்பினால் வந்த திட்டம். இந்த உழைப்பின் திட்டத்தை எதிர்மறையாக மக்களிடம் கொண்டு சேர்க்க முயன்றிருக்கிறார்கள். இது குறித்து அறிந்தவுடனே, அதன் மீதுள்ள உண்மைத்தன்மையை உணர்ந்து தயாரிப்பாளர்களே அந்த வசனங்களை நீக்க ஒப்புக் கொண்டனர்.
ஆனால் காங்கிரஸார் இதனை ஏதோ எமர்ஜென்ஸி போன்று கருத்து தெரிவிப்பது, மிகவும் தவறானது. நம் நாட்டில் எமர்ஜென்சி நடத்தியவர்கள் காங்கிரஸார். இதில், ப.சிதம்பரம் ஆளும்கட்சிக்கு ஆதரவாக மட்டுமே படம் எடுக்க வேண்டும் என்ற நிலை இருப்பதாகக் கூறியுள்ளது கண்டிக்கத் தக்கது.
முன்னர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் குறித்து, தங்கள் பேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட 2 பேரைக் கைது செய்தார்கள். அப்படிப்பட்ட கருத்துச் சுதந்திரத்தை அனுமதித்தவர் ப.சிதம்பர்ம்.
எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரித்தவர்கள் காங்கிரஸார். கேரளத்தில் எதிர்க்கட்சியினரைக் கொன்று குவித்து வருபவர்கள் கம்யூனிஸ்ட்கள். இவர்கள் எல்லாம் கருத்துச் சுதந்திரத்தைப் பற்றிப் பேச வேண்டியதுதான்.
முதலில் இந்த மெர்சல் படத்தை திரையிட கர்நாடகாவில் எதிர்ப்பு தெரிவித்து படத்தை ரிலீஸ் செய்யவே விடமாட்டேம் என்று சொன்னவர்களை அடக்கி, கர்நாடகத்தில் காங்கிரஸார் அதை முதலில் சரி செய்ய முயன்றிருக்க வேண்டும்... என்று காட்டமாக பதிலளித்துள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன்.