இந்தியாவின் எளிய முதலமைச்சர் மீண்டும் வெற்றி பெறுவாரா? இன்று வாக்கு எண்ணிக்கை !!

First Published Mar 3, 2018, 6:32 AM IST
Highlights
tiripura megalaya and nagaland vote counting today


திரிபுரா,மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இந்தியாவின் ஏழை, எளிய முதலமைச்சர் என பெயரெடுத்த மாணிக் சர்க்கார் மீண்டும் திரிபுரா முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவாரா? என கேள்வி எழுந்துள்ளது.

தலா 60 உறுப்பினர்களை கொண்ட திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநில சட்டசபைகளின் ஆயுட்காலம் முடிவடைவதையொட்டி தேர்தல் கமிஷன் தேர்தலை நடத்த முடிவு செய்தது. இதையடுத்து திரிபுராவில்  59 தொகுதிகளுக்கு கடந்த 18-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அங்கு 74 சதவீத ஓட்டுகள் பதிவாகின.



மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் கடந்த 27-ந்தேதி தேர்தல் நடந்தது. இந்த இரு மாநிலங்களிலும் 59 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது.  மேகாலயாவில் 67 சதவீதமும், நாகாலாந்தில் 75 சதவீதமும் ஓட்டுகள் பதிவானது.

இந்த 3 மாநிலங்களிலும் தலா 59 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் ஒருவர் மரணம் அடைந்ததால் அங்கு ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. மேகாலயாவில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கொல்லப்பட்டதால் ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

நாகாலாந்தை பொறுத்தவரை வடக்கு அங்காமி-2 தொகுதியில் போட்டியிட்ட தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தலைவர் நெய்பியூ ரியோ போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதால் எஞ்சிய 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.



திரிபுராவில் மாணிக் சர்க்கார் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு இம்முறை பாஜக கடும் சவாலாக திகழ்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் திரிபுராவில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்படுவதால் இந்த மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்தியாவிலேயே மிக எளிய அப்பழுக்கற்ற முதலமைச்சர் என பெயரெடுத்த மாணிக் சர்க்கார் மீண்டும் முதலமைச்சராக 5 வது முறையாக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு  எண்ணிக்கை இன்றுகாலை 8 மணிக்கு தொடங்குகிறது. முற்பகல் 11 மணிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!