அங்கங்களைப் பிரிக்க நினைப்பவர்கள் தமிழின், தமிழனின், தமிழ்நாட்டின் எதிரிகள் என்று தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் இன்று சூட்டைக் கிளப்பியிருக்கும் சொல் கொங்கு நாடு. கொங்கு நாடு என்ற பெயரில் மேற்கு தமிழகத்தை இரண்டாக பிரிக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியானதையடுத்து, அதுகுறித்து அரசியல் தலைவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். கொங்கு நாடு என்பதை பாஜகவினர் தீவிரமாக முன்னெடுக்கிறார்கள். கொங்கு நாடு என்று சொல்வதை திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் தமிழக சிறுபான்மை ஆணையத்தின் தலைவரான பீட்டர் அல்போன்ஸ் இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில்,“கை, கால், கழுத்து என அவயங்களுக்கு தனி பெயர் இருந்தாலும் அவை உடலோடு இருந்தால்தான் உயிரோடு இயங்க முடியும். கொங்குநாடு, செட்டிநாடு, வருஷநாடு, நாஞ்சில்நாடு, மறவர்நாடு, தென்பாண்டிநாடு என்பதெல்லாம் தமிழ்நாட்டின் அங்கங்கள்! அவற்றை பிரிக்க நினைப்பவர்கள் தமிழின், தமிழனின், தமிழ்நட்டின் எதிரிகள்” என ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.