எடப்பாடிக்கு புதிய சிக்கல்... தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ விலகியதின் பரபரப்பு பின்னணி..!

By Thiraviaraj RMFirst Published May 20, 2019, 5:20 PM IST
Highlights

அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் விலகியது சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தள்ளாடி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அவர் அதிமுகவிலிருந்து விலகியதன் பின்னணி வெளியாகி இருக்கிறது. 

அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் விலகியது சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தள்ளாடி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அவர் அதிமுகவிலிருந்து விலகியதன் பின்னணி வெளியாகி இருக்கிறது. 

அம்மா பேரவை இணைச்செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அதிமுக தலைமை செயலகத்திற்கு அவர் விலகல் கடிதத்தை அவர் அனுப்பி இருக்கிறார். தமிழக சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சராக இருந்தவர் தோப்பு வெங்கடாசலம். ஈரோடு புறநகர் மாவட்டத்தின் மாவட்ட செயலாளராகவும் இருந்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தோப்பு வெங்கடாசலத்துக்கு மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் அதிமுகவில் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த பகை நெருப்பு இப்போது கொளுந்து விட்டு எரியத் தொடங்கி உள்ளது. ஈரோடு புறநகர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்கும், தற்போதைய மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கே.சி.கருப்பணனுக்கும் எப்போதும் ஏழாம் பொறுத்தம். 

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அமைச்சர் கருப்பணன், தோப்பு வெங்கடாசலம் ஆகியோரை தேர்தல் பொறுப்பாளராக அறிவித்தது அதிமுக தலைமை. ஆனால் கருப்பணன் மீதுள்ள வெறுப்பால் அரவக்குறிச்சியில் தேர்தல் பணியாற்றாமல் ஒதுங்கிய தோப்பு வெங்கடாசலம் சூலூருக்கு சென்று தேர்தல் பணியாற்றினார். கடந்த வாரம் தனக்கும், அமைச்சர் கருப்பணனுக்கும் பகை இருப்பதை செய்தியாளரை கூப்பிட்டு பகிரங்கப்படுத்தினார் தோப்பு வெங்கடாசலம். ’’மக்களவை தேர்தலில் திருப்பூர் தொகுதியில் எம்.எஸ்.எம்.ஆனந்தன் போட்டியிட்டார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர். அவருக்கு பெருந்துறை தொகுதி முழுவதும் நானும், அ.தி.மு.க.வின் அனைத்து தொண்டர்களும் தீவிரமாக வேலை செய்தோம். ஆனால், இந்த தொகுதியின் மாவட்ட செயலாளரும், மாவட்டத்தின் அமைச்சராக இருக்கும் கே.சி.கருப்பணன் அ.தி.மு.க.வுக்கு வாக்கு சேகரிக்கும் வேலையை விட்டு, தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாகவும், அ.ம.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாகவும் அவரது ஆதரவாளர்களை இறக்கி விட்டார். இது இங்குள்ள அ.தி.மு.க. தொண்டர்கள், கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அப்பட்டமாக தெரியும்.

தேர்தலின்போது பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் பெற்றுவிடக்கூடாது. அதன் மூலம் என்மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டார். அவர் மாவட்ட செயலாளராக பொறுப்பு ஏற்றது முதல் கட்சி தொண்டர்களை சந்திப்பது இல்லை. ஆனால், மக்களவை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக பணியாற்றியவர்களுக்கு அவருடைய வீட்டில் அழைத்து விருந்து வைத்தார்.

அமைச்சர் பதவியை வைத்து அவர் கட்சிக்கே துரோகம் செய்து வருகிறார். இதுபோன்றவர்களை கட்சிக்குள் வைத்திருக்கலாமா என்று கட்சி தலைமை முடிவு எடுக்க வேண்டும். அவர் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும், கட்சிக்கு எதிராக பணியாற்ற அவரது ஆதரவாளர்களுக்கு கட்டளையிட்டது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஆதாரத்துடன் சேகரித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளேன். அவர்களது முடிவுக்காக பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. தொண்டர்கள் காத்திருக்கிறோம். கட்சியை அழிக்கப்பார்க்கும்போது எங்களால் பொறுமையாக இருக்க முடியவில்லை’’ என தோப்பு வெங்கடாசலம் எச்சரித்து இருந்தார். இப்படி குற்றம்சாட்டி ஒருவார காலம் ஆன நிலையில் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏவான தோப்பு வெங்கடாசலம் கட்சியை விட்டு விலகி இருக்கிறார்.

click me!