தூத்துக்குடியில் பயங்கரம்... எஸ்.ஐ. மினிலாரி ஏற்றி படுகொலை.. உடனே 50 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்..!

By vinoth kumarFirst Published Feb 1, 2021, 3:33 PM IST
Highlights

ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாலு வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் தருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 
 

ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாலு வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் தருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  அறிக்கையில்: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பாலு அவர்கள் நேற்றிரவு (31.1.2021 அன்று) காவல் நிலையத்தில்  பணியில் இருந்தபோது, ஏரல் கடைவீதியில் உள்ள ஒரு உணவகத்தில் மதுபோதையில் ஒருவர் தகராறு செய்வதாக கடையின் உரிமையாளர் தொலைபேசி வாயிலாக தகவல் தந்ததையடுத்து, உதவி ஆய்வாளர் பாலு மற்றும் காவலர் பொன்சுப்பையாவுடன் அக்கடைக்குச் சென்று தகராறில் ஈடுபட்ட கொற்கை கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் என்பவரை எச்சரித்து அனுப்பி வைத்து விட்டு, இருவரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கண்ட இருவரும் இன்று (1.2.2021) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஆத்திரமடைந்த முருகவேல் என்பவர், சரக்கு வேனை ஓட்டிச்சென்று, இரு சக்கர வாகனத்தின் பின் பகுதியில் மோதியதில், உதவி ஆய்வாளர் பாலு கீழே விழுந்து பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.இச்சம்பவத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலு அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பணியில் ஈடுபட்டு இருக்கும் போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலு அவர்களின் குடும்பத்திற்கு சிறப்பினமாக, ரூபாய் 50 லட்சமும், காயமடைந்த காவலர் பொன்சுப்பையா அவர்களுக்கு ரூபாய் 2 லட்சமும்  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலு அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை  சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுக் கொடுக்க காவல் துறையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

click me!