பாஜகவிடம் பக்குவமாக பேசி... தேமுதிகவிடமும் டீலை முடித்த எடப்பாடி பழனிசாமி... பாமகவும் வந்தாச்சு வழிக்கு..!

By Thiraviaraj RMFirst Published Feb 1, 2021, 3:19 PM IST
Highlights

உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களை அனுப்பி,  ராமதாஸுடன் நேரில் பேச வைத்துள்ளார். அவர்கள், இப்போதைக்கு அரசால் என்ன செய்ய முடியும் என்கிற எதார்த்த நிலையைச் சொல்லி புரிய வைத்தனர்.

அதிமுக கூட்டணியில் நிலவி வந்த முரண்பாடுகள் அடுத்தடுத்து மறைய ஆரம்பித்து வருகின்றன. வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடரும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, சமீபத்தில் அறிவித்தார். கூட்டணி கட்சிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எப்படி லாவகமாக டீல் செய்து வருவதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த நவம்பர் மாதத்தில் சென்னை வந்தார். அப்போது அவரது முன்னிலையிலேயே வரவிருக்கும் தேர்தலிலும் பாஜக - அதிமுக கூட்டணி தொடரும் என இபிஎஸ்-சும், ஓபிஎஸ்-சும் அறிவித்தனர். இதற்கு முன்னதாக அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடிதான் என்று அந்தக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
 
ஆனால், தமிழக பாஜகவினர் இதையெல்லாம் நாங்கள்தான் முடிவு செய்வோம் என்ற ரீதியில் பேசி வந்தனர். எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் மட்டும் அதிமுக கூட்டணியில் இருக்க முடியும். மற்றவர்கள் வெளியேறலாம்’என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமியின் அதிரடி பேச்சால் பாஜக மட்டுமல்லாது பாமக , தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளே ஜெர்க் ஆயின. இந்நிலையில் வேறு வழியின்றி அதற்கடுத்த சில தினங்களிலேயே தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி .ரவி, ’தமிழகத்தில் பெரிய கட்சியாக இருப்பது அ.தி.மு.கதான். அவர்களுக்குப் பிறகுதான் பா.ஜ.க’என எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மதுரை பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, ’வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடரும் என்று அறிவித்தார். நட்டாவின் இந்த அறிவிப்புக்கும், எடப்பாடியின் சமீபத்திய டெல்லி விசிட்டுக்கும் முடிச்சுப் போட்டுப் பேசும்  அரசியல் நோக்கர்கள், ‘எடப்பாடியின் ஆளுமை எதிரொலிக்கிறது என்பதற்கான உதாரணம்தான் இது’என்கிறார்கள்.

இன்னொருபுறம் பாமக, தேமுதிக மற்றும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி போன்ற கூட்டணி கட்சிகளும், தேர்தலில் அதிக தொகுதிகளை எதிர்பார்த்து நெருக்கடி கொடுத்து வருகின்றன. குறிப்பாக பாமக, வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு கோரி அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், முதல்வர் எடப்பாடி இந்த விவகாரங்களை லாவகமாக டீல் செய்து வருகிறார்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களை அனுப்பி,  ராமதாஸுடன் நேரில் பேச வைத்துள்ளார். அவர்கள், இப்போதைக்கு அரசால் என்ன செய்ய முடியும் என்கிற எதார்த்த நிலையைச் சொல்லி புரிய வைத்தனர். இதனையடுத்து பாமக அமைதியானது. அதேபோன்று, தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும், அதிக இடங்களை எதிர்பார்த்து எக்குத்தப்பாக பேசி வந்தார். ஆனால், தேமுதிகவுக்கு தற்போதுள்ள வாக்கு சதவீதம் உள்ளிட்ட சில விஷயங்களை தூதர்கள் மூலம் தெளிவாக எடுத்துரைத்து எடப்பாடி கறார் காட்டியிருக்கிறார். இதனையடுத்தே அதிமுக உடனடியாக கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என பிரேமலதா பிளேட்டை மாற்றி போட்டுள்ளார். அதே போன்று அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரும் தெரிவித்துள்ளார். ஆனால், திமுக கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது. 

click me!