கொரோனா கொடூரத்தில் இது இன்னும் கொடுமையானது..!! மத்திய அரசு இதை செய்யாவிட்டால் மாநில அரசுகள் அவ்வளவுதான்..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 12, 2020, 11:49 AM IST
Highlights

மத்திய அரசு வழங்கியுள்ள சலுகையால் மாநிலங்களில் நிதிப்பற்றாக்குறை 4.5 சதவீதம் முதல் 5.5 சதவீதம் வரை உயரும், இதனால் நடப்பு நிதியாண்டில் மாநில அரசுகள் தங்களின் மிக முக்கியமான மூலதனச் செலவுகளை மேற்கொள்ள முடியாது,

ஜிஎஸ்டி இழப்பீடு வழங்காவிட்டால் மாநிலங்களில் நிலைமை மேலும் மோசமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்காவிட்டால், மாநில அரசுகளின் நிதி பற்றாக்குறை மிக மோசமாக பாதிப்பை சந்திக்கும் என இக்ரா என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி விதிமுறை என்ற பெயரில் கடந்த 2011 ஜூலை 1 முதல் புதிய சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு அமல்படுத்தியது. அதாவது அதுவரை மாநிலங்களுக்கு நேரடியாக வந்து கொண்டிருந்த வரி வருவாயில் பெரும் பகுதியை மத்திய அரசு தன் வசம் எடுத்துக் கொண்டது. 

இதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசே ஈடுகட்டும் என கூறி மத்திய அரசு அதை சமாளித்தது. மாநிலங்களில் ஆண்டு வருவாய் வளர்ச்சி 14 சதவீதத்தை விட குறைவாக இருந்தால் மத்திய அரசு அதற்கான இழப்பீட்டை வழங்கும் என தெரிவித்தது. ஆனால் உறுதி அளித்தபடி இந்த இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு வழங்குவதில்லை. ஒவ்வொரு முறையும் பெரும் போராட்டத்திற்கு பிறகு மாநிலங்கள் தங்களுக்கான நிதியை பெற்று வருகின்றன. இடையே ஏற்பட்ட கொரோனா தொற்று பிரச்சனையால் மாநில அரசுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மத்திய அரசு ஒரேயடியாக ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்க முடியாது என அண்மையில் கூறிவிட்டது. 

இந்த அறிவிப்பு மாநிலங்களை மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் மாநில அரசுகளுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை முழுவதுமாக வழங்காமல் இருந்தால் மாநிலங்களின் செலவுகளில் ரூபாய் 3 லட்சம் கோடி வரை குறையும் என்று இக்ரா நிறுவனம் தனது ஆய்வில் எச்சரித்துள்ளது. இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்குப் பதிலாக மாநில அரசுகள் கடன் வாங்கி கொள்ளலாம் என்றும், மத்திய அரசு வழங்கியுள்ள சலுகையால் மாநிலங்களில் நிதிப்பற்றாக்குறை 4.5 சதவீதம் முதல் 5.5 சதவீதம் வரை உயரும், இதனால் நடப்பு நிதியாண்டில் மாநில அரசுகள் தங்களின் மிக முக்கியமான மூலதனச் செலவுகளை மேற்கொள்ள முடியாது, அடிப்படை வளர்ச்சித் திட்டங்கள் அடியோடு முடங்கும், இது பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் என்றும் இக்ரா எச்சரித்துள்ளது. 

 

click me!