தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திமுக அரசே இது வெட்கக்கேடானது... சீறும் சீமான்..!

By Thiraviaraj RMFirst Published Nov 22, 2021, 5:49 PM IST
Highlights

தாய்த்தமிழ் மொழியைப் புறக்கணிப்பது குறித்து எவ்விதக் கண்டனமும் தெரிவிக்காமல், உரிய விளக்கமும் கேட்காமல் திமுக அரசு அமைதி காப்பது வெட்கக்கேடானது.

இந்தியத்தொழில்நுட்பக்கழகத்தில் தமிழ்த்தாயை அவமதிப்பதா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஓருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளீயிட்டுள்ள அறிக்கையில், ‘’சென்னையிலுள்ள இந்தியத்தொழில்நுட்பக்கழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடாமல் தொடர்ந்து புறக்கணித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்த்தாய் வாழ்த்திற்குப் பதிலாகச் சமஸ்கிருத மந்திரங்களை ஓதுவது, திட்டமிட்டுத் தமிழை இழிவுபடுத்தி, தமிழர்களை அவமதிக்கும் இழிசெயலாகும்.

 ‘தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடேன்! தமிழைப் பழித்தவனைத் தாயே தடுத்தாலும் விடேன்!’ எனும் புரட்சிப்பாவலர் பாரதிதாசனின் சீற்ற மொழிக்கேற்ப இத்தகைய அவமதிப்புச்செயல்களில் சென்னை இந்தியத் தொழில்நுட்பக்கழக நிர்வாகம் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க முடியாது.

தமிழ்நாட்டில் நிலைபெற்றுள்ள ஒன்றிய அரசின் கல்வி நிறுவனம் தாய்த்தமிழ் மொழியைப் புறக்கணிப்பது குறித்து எவ்விதக் கண்டனமும் தெரிவிக்காமல், உரிய விளக்கமும் கேட்காமல் திமுக அரசு அமைதி காப்பது வெட்கக்கேடானது. ஆகவே, ‘தமிழிய முதல்வர்’, ‘தமிழ்த்தேசிய முதல்வர்’ எனத் தங்களுக்குத் தாங்ளே பட்டங்களைச் சூட்டி, தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திமுக அரசு, இவ்விவகாரத்தில் சீரியக் கவனமெடுத்து உடனடியாக இதனைச் சரிசெய்ய முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

click me!