திருவாரூர் இடைத் தேர்தல் வேண்டுமா ? அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பின் அறிக்கை அனுப்பினார் தேர்தல் அதிகாரி !!

By Selvanayagam PFirst Published Jan 6, 2019, 8:31 AM IST
Highlights

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தும் சூழ்நிலை உள்ளதா? என்பது குறித்து அரசியல் கட்சிகளுடன்  நேற்று நடத்தப்பட்ட ஆலோசனை குறித்த  அறிக்கை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டது. இதனால் அந்த தொகுதியில் தேர்தல் தள்ளிவைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

திருவாரூர் சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த கருணாநிதி மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வரும் 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. வருகிற 10-ந் தேதியுடன் மனு தாக்கல் முடிவடைகிறது.

இந்த தொகுதியில் திமுக  சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடுகிறார். அமமுக வேட்பாளராக எஸ்.காமராஜ் அறிவிக்கப்பட்டு உள்ளார். ஆளும் அதிமுக. இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. தொகுதியில் கட்சிகளின் தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டன.

இந்த நிலையில், சிபிஐ  கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் ஆரோராவை நேரில் சந்தித்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான திருவாரூரில் இன்னும் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடையவில்லை என்றும், மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றும், எனவே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, அந்த மனுவை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு அனுப்பிவைத்த தேர்தல் கமிஷன், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை உள்ளதா? என்பது குறித்து ஆய்வு  அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டது.

இதைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் நேற்று தனது அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகள் கூட்டத்தை கூட்டி அவர்களுடைய கருத்துகளை கேட்டு அறிந்தார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள், இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.அவர்களுடைய கருத்துகளை கேட்டு அறிந்த நிர்மல்ராஜ், “நீங்கள் தெரிவித்த கருத்துகள் தலைமை தேர்தல் கமிஷனரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்” என்று கூறினார்.

இதையடுத்து தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அரசியல் கட்சிகள் கூறிய கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை டெல்லிக்கு அனுப்பி வைத்தார். இதன் அடிப்படையில் திருவாரூரில் இடைத் தேர்தல் நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து தேர்தல் ஆணைம் நானை முடிவு செய்யும் என தெரிகிறது.

click me!