
தற்போதைக்கு தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும், தற்போதைக்கு காங்கிரஸில் இருக்கும் அண்ணன் திருநாவுக்கரசரை பற்றி ஒரு ஜோக் உண்டு. ’அரசரால் பிழைக்கும் பிஸ்னஸ் இரண்டு. ஒன்று காரில் ஸ்டிக்கர் ஒட்டுறவன், இன்னொன்னு கட்சி கொடி தயாரிக்கிறவன். ரெண்டு பேருக்கும் அடிக்கடி புதுப்புது டிஸைன்ல வேலை கொடுப்பார் இவர்.’ என்பதுதான். புரிந்தவர்கள் சிரித்துக் கொள்ளுங்கள்...நோ! நோ! நோ! தலையிலெல்லாம் அடிக்கக்கூடாது.
அந்தகாலத்தில் எம்.ஜி.ஆரின் வாரிசாகவே அரசர் தன்னை அடையாளப்படுத்தியபோது செம்ம்ம காண்டான ஒரு மனிதர் நடிகர் பாக்யராஜ்தான். அந்த பாக்யராஜை மேலும் கடுப்பேற்றும் வகையில் சினிமாவிலும் அவதாரம் எடுத்தார் திருநாவு. அதன்பிறகு அரசியல் பயணத்தை துவக்கி பல அலுவலகங்களை அலங்கரித்தவர் இப்போது காங்கிரஸில் இருக்கிறார்.
சரி மேட்டருக்கு வருவோம். திருநாவுக்கரசர் எந்த கட்சியில் தான் இருந்தாலும் மிக நெருக்கமாக நட்பு பாராட்டும் வி.ஐ.பி.க்களில் ஒருவர் ரஜினி. தன்னைப் பற்றிய அரசியல் சற்றே டல்லடிக்கிறது என்றால் சட்டென்று ரஜினியை சந்தித்துவிட்டு வந்து பெப்பை ஏற்றிக் கொள்வார்.
இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருகிறாரா எனும் சூறாவளி இப்போது சுழன்றடிக்க துவங்கியிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து திருவாய் மலர்ந்திருக்கும் திருநாவுக்கரசர், ’ரஜினிக்கு ஆதரவு இருக்குது, ஆனாலும் அவர் வேண்டாமுன்னு சொல்றவங்களுக்கும் இருக்கிறாங்க இல்லையா!’ என்று மென்மையாக விமர்சிப்பது போல் பேசிவிட்டு ‘’சினிமாவில் கூட ‘என்ன செய்தால் மக்களுக்குப் பிடிக்கும்?’ என்று சிந்திப்பவர் ரஜினி. எனவே அரசியலிலும் எதைச்செய்தால் மக்களுக்குப் பிடிக்கும்? என அடையாளம் காண்பார். அவரை கூட்டணிக்கு இழுக்க பா.ஜ.க. முயற்சிக்கலாம் ஆனால் ரஜினி தெளிவான முடிவை எடுப்பார்.”என்றவர் அடுத்த தொட்ட மேட்டர்தான் முக்கியமானது.
அதாவது “ரஜினி தனிக்கட்சி தொடங்குவார் என்பதுதான் எனது கணிப்பு. அவர் யாருடன் கூட்டணி சேருவார் என்பதைவிட, அவரோடு எந்த கட்சிகள் போய் சேரும்? என விவாதிக்க வேண்டியிருக்கும். போட்டியே நடக்கும். பா.ஜ.க. அரசின் அச்சுறுத்தல்களுக்கோ, மிரட்டல்களுக்கோ அவர் அடி பணியமாட்டார் என நம்புகிறேன்.” என்று போட்டுத் தாக்கியுள்ளார்.
இந்த வார்த்தைகளைத்தான் அரசியல் விமர்சகர்கள் எடுத்து வைத்து அலசுகிறார்கள். அதாவது “ரஜினிக்கும் அரசருக்கும் இடையில் நெருங்கிய நட்பு இருப்பது தெரிந்த விஷயமே. இந்நிலையில் சமீபத்தில் கூட ரனினியை அவர் சந்தித்தார். இப்போது ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய விவகாரம் தீப்பிடித்து எரியும் நிலையில் அவர் தனிக்கட்சி ஆரம்பிப்பார் என்று அரசர் சொல்வது சிந்திக்க வைக்கிறது. ரஜினி தனிக்கட்சி முடிவில் இருக்கிறாரோ எனும் சந்தேகம் இவரது வார்த்தைகளின் மூலம் அழுத்தமாகிறது.
காரணம், ரஜினியை பொத்தாம் பொதுவாக தெரிந்து வைத்திருக்கும் யாரோ ஒரு அரசியல்வாதி இப்படி சொல்லியிருந்தால் நாம் அதிக கவனம் கொடுக்க தேவையில்லை. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராகவும், ரஜினிக்கு நெருக்கமானவராகவும் இருக்கும் திருநாவுக்கரசரானவர் இப்படி சொல்கிறார் என்றால் இதன் பின்னணியில் கணிசமான சதவிகித அளவில் உண்மை இருக்கத்தானே முடியும்? அப்படியானால் ரஜினி தனிக்கட்சிதான் தொடங்குகிறாரா?” என்று சீரியஸாக கேட்பவர்கள், இறுதியில் அரசரையும் நைஸாக நக்கலடிக்க தவறவில்லை.
அதாவது “ரஜினி துவங்கும் தனிக்கட்சியுடன் மற்ற கட்சிகள் கூட்டணி வைக்கும் சொல்கிறாரே அப்படியானால் அந்த கூட்டணியில் இப்போதே ஒரு இடம் கேட்டு துண்டு போடுகிறாரோ? இந்த துண்டு தமிழக காங்கிரஸுக்காகவா அல்லது ரஜினி ஆரம்பிக்கும் புதிய கட்சியில் தனக்கு மட்டும் இடம் கேட்டா? அப்போ ஸ்டிக்கர் ஒட்டுறவருக்கு கூடிய சீக்கிரம் புது டிஸைன் ஆர்டர் இருக்குதுன்னு சொல்லுங்கோ!” என்று ஒரு சைஸாக தாளித்துள்ளனர்.
அப்படியா அரசர் சார்?