
ரஜினி அரசியலுக்கு வருவதை சாதி, மதவாத அரசியல் கட்சிகள்தான் எதிர்க்கின்றன என்றும்,அவர் தனிக்கட்சி தொடங்கி சாதி, மதத்திற்கு எதிராக சவுக்கடி கொடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தொல்.திருமாவளவன், டாக்டர் அன்புமணி ராமதாஸ், சீமான் போன்ற தலைவர்களை பாராட்டிப் பேசினார்.
விடுதலைச் சிறுத்தைக்ள் கட்சித் தலைவர் திருமா தமிழகர்களுக்கான ஒரு போராளி எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சாதிய வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்றும் பேசிய திருமா, விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிப்பிட்ட சாதிய கட்சி அல்ல. ஒட்டுமொத்த தமிழர்களுக்காக போராடும் கட்சி. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாகவும், மதவாதம், சாதி அரசியல் செய்பவர்கள் தான் ரஜினி அரசியலுக்கு வருவதை எதிர்க்கிறார்கள் என தெரிவித்தார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றார்கள். அவர்கள் தமிழகத்தை ஆளவில்லையா? அதைப் போல் ரஜினியும் தமிழகத்தை ஆளலாம் என கூறினார்.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம் என்றும். சாதி, மத வேலிக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் தனி கட்சியை ரஜினிகாந்த் தொடங்கி அரசியலுக்கு வருவதை வரவேற்பதாகவும் திருமா தெரிவித்தார்.