
எப்படி வருவேன்?, எப்போது வருவேன்? என்று தெரியாது, ஆனால் வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வருவேன் என்று சினிமாவில் கூறி வந்த ரஜினி, நிச்சயம் அரசியலுக்கு வரும் நேரம் இதுவே என்கின்றனர் முக்கிய தலைவர்கள்.
மரம் சும்மா இருந்தாலும், காற்று விடுவதில்லை என்பது போல, அவர் சும்மா இருந்தாலும், அவரது ரசிகர்களும், பாஜகவும், இங்குள்ள சில அரசியல் தலைவர்களும், அவரை விடுவதாக இல்லை.
பாஜக வில் அவர் சேரப்போவதில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதால், அவர் தனிக்கட்சிதான் தொடங்கப்போகிறார். ஆனால், அவரது கட்சி பாஜக உருவாக்கும் கூட்டணியில் இருக்கும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
பாஜகவை பொறுத்தவரை, இப்போதே கூட்டணியை அமைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டது. பன்னீர் அணி, தமாகா, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் அந்த கூட்டணியில் இணைய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக, அதிமுக எடப்பாடி அணி, இடது சாரிகளை தவிர அனைத்து கட்சிகளையும் இந்த கூட்டணிக்கு கொண்டுவந்து, ரஜினியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, பாமக, விடுதலை சிறுத்தைகள், சமத்துவ மக்கள் கட்சி ஆகிவற்றுக்கும், கூட்டணிக்கு வருமாறு பாஜக அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில், ரஜினியின் அரசியல் பிரவேசத்தையே எதிர்க்கும் பாமக, ரஜினி அரசியலுக்கு வந்தால் எதிர்க்கும் முதல் ஆளாக நான் இருப்பேன் என்று சொன்ன சரத்குமார் ஆகியோர் இந்த கூட்டணிக்கு எப்படி வருவார்கள்? என்பது சந்தேகமே.
எப்படி இருந்தாலும், பாமக வையும், சரத்குமாரையும், கூட்டணிக்குள் கொண்டு வராமல், பாஜக ஓயாது என்கின்றனர் டெல்லிக்கு நெருக்கமானவர்கள்.