கல்வி கொள்கை மூலம் சமஸ்கிருதம் திணிக்க முயற்சி... மோடி சர்க்கார் மீது திருமாவளவன் காட்டம்!

Published : Oct 22, 2019, 10:17 PM IST
கல்வி கொள்கை மூலம் சமஸ்கிருதம் திணிக்க முயற்சி... மோடி சர்க்கார் மீது திருமாவளவன் காட்டம்!

சுருக்கம்

தமிழகத்துக்கு இரண்டு மொழிகளே போதும் என்று ஏற்கனவே தமிழகத்தின் சார்பில் மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளோம். அதைப் புறக்கணித்துவிட்டு மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் எம்மீது சமஸ்கிருதத்தைத் திணிக்க முயற்சிப்பது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல. 

செம்மொழி என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்க முயற்சித்தால் தமிழக மக்கள் அதை சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:


 “புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் மாணவர்கள் அனைவரும் இந்தியைக் கற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. தமிழத்தில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக அது கைவிடப்பட்டது. ஆனால், இப்போது தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நவம்பர் 11 அன்று அறிமுகப்படுத்தப் போவதாகவும் அதில் இந்திக்குப் பதிலாக செம்மொழிகளில் ஏதேனும் ஒன்றைக் கற்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது சமஸ்கிருதத் திணிப்புக்கு வழிகோலும். இதை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இரு மொழிகளே போதும் என்ற தமிழகத்தின் நிலைபாட்டை ஏற்று மத்திய அரசு கல்விக் கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம். தேசிய கல்விக் கொள்கை ஒன்றை மத்திய அரசு கொண்டு வருவதில் நமக்கு மறுப்பேதும் இல்லை. உலகிலேயே படிப்பறிவில்லாதவர்கள் இந்தியாவில்தான் அதிகம். அதைப் போக்க தேசிய கல்விக் கொள்கை தேவை.
 அதுபோலவே உயர்நிலை வகுப்பில் படிக்கும் மாணவர்களில் 50 சதவீதம் பேர் படிப்பை நிறுத்திக் கொள்கிறார்கள். இந்த இடைநிற்றலை முற்றாக ஒழித்து அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெறும் அளவுக்குப் தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட வேண்டும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்று நீண்ட நாளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதைச் செய்வதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும். ஆனால், இவற்றையெல்லாம் விட்டுவிட்டு இந்தியையும் சமஸ்கிருதத்தையும் மக்கள் மீது வலிந்து திணிப்பதற்கு தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்படுகிறது. இதை ஒருபோதும் ஏற்க முடியாது .
தமிழகத்துக்கு இரண்டு மொழிகளே போதும் என்று ஏற்கனவே தமிழகத்தின் சார்பில் மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளோம். அதைப் புறக்கணித்துவிட்டு மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் எம்மீது சமஸ்கிருதத்தைத் திணிக்க முயற்சிப்பது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல. கல்வி என்பது மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து தீர்மானிக்கக்கூடிய பொதுப் பட்டியலில் உள்ளது. இப்போது வடிவமைக்கப்படும் தேசிய கல்விக் கொள்கை மாநில அரசின் அதிகாரத்தை முற்றாகப் பறித்து கல்வியை முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்வதாக உள்ளது .இதை ஒருபோதும் தமிழகம் ஏற்காது.
இந்த நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். செம்மொழி என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்க முயற்சித்தால் தமிழக மக்கள் அதை சகித்துக்கொள்ள மாட்டார்கள்” திருமாவளவன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Annamalai Exit: பாஜகவை விட்டு அண்ணாமலை வெளியேற இதுதான் காரணமா? டெல்லி கூட்டத்தில் கசிந்த அதிர்ச்சி தகவல்!
Trichy East By Election: தனித்தனியாய் தட்டித்தூக்கும் விஜய்.! திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கும் அதிமுக வாரிசு.!