பற்றி எரியும் திரிபுரா.. பாஜகவுக்கு எதிராக திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு..

By Ezhilarasan BabuFirst Published Nov 20, 2021, 9:52 PM IST
Highlights

இசுலாமியர்களை குறிவைத்து 27 வன்முறைச் சம்பவங்கள் நடந்த பிறகும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதற்கிடையில், திரிபுரா வன்முறைகள் குறித்து பி.யூ.சி.எல் என்னும் மனித உரிமை அமைப்பின் சார்பில் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு, 

திரிபுராவில் இடதுசாரிகள் மற்றும் இசுலாமியர்கள் மீது பாஜக'வினரால்  நடத்தப்படும் வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்து வரும் 
23.11.2021 விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு விவரம் பின்வருமாறு:-  திரிபுரா மாநிலத்தில் இடதுசாரிகள் மற்றும் இசுலாமியர்கள் மீது கொடூர வன்முறை தாக்குதல்கள் நடந்து வருகின்றன. வன்முறையை தடுப்பதற்கு அங்குள்ள பாஜக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட இடதுசாரிகள் மற்றும் இசுலாமியர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்து அடக்குமுறை செய்கிறது. 

அண்மையில் அகர்தலாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது. அக்கட்சியின் மாவட்ட மற்றும் வட்டாரக் குழு அலுவலகங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. தேசர்கதா நாளிதழ் அலுவலகமும், 24 நியூஸ் சமூக ஊடக அலுவலகமும் தாக்கப்பட்டதோடு, திரிபுரா மக்களின் தலைவரான தசரத் தேவ் அவர்களின் சிலையும் உடைக்கப்பட்டது. ஆளும் பாஜக அரசின் துணையோடு நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களால் ஊக்கம் பெற்ற பாஜக சங்பரிவார் கும்பல், கடந்த சில வாரங்களாக அங்குள்ள இசுலாமியர்களையும் குறிவைத்து தாக்கிக் கொண்டிருக்கிறது.

இதுவரை16 பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்டுள்ளன. இசுலாமியர்களின் வீடுகள் தகர்க்கப்பட்டுள்ளன. இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களை இழிவு படுத்தும் வகையில் கொச்சையான முழக்கங்களை எழுப்பி பாஜக கும்பல் அங்கு ஊர்வலம் நடத்துகின்றனர். இசுலாமியர்களை குறிவைத்து 27 வன்முறைச் சம்பவங்கள் நடந்த பிறகும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதற்கிடையில், திரிபுரா வன்முறைகள் குறித்து பி.யூ.சி.எல் என்னும் மனித உரிமை அமைப்பின் சார்பில் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு, அங்கு நடந்த வெறியாட்டங்களை அம்பலப்படுத்தியதற்காக மனித உரிமை ஆர்வலர்கள் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீதி கேட்டு போராடும் திரிபுரா இசுலாமிய மக்களின் போராட்டத்திற்கும் தடை போடப்பட்டுள்ளது.

திரிபுராவில் அரங்கேறி வரும் இத்தகைய பாசிச வெறிப் போக்கை கண்டித்தும், பாஜக சங்பரிவார் குண்டர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், நவம்பர் 23அன்று மாலை 3 மணிக்கு, சென்னையில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் பங்கேற்க வேண்டுமென அழைக்கிறேன் எதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!