தாயின் காலை பிடித்து தனியாளாய் அமர்ந்திருக்கும் திருமாவளவன்.. நெகிழ வைக்கும் ஒற்றை போட்டோ.

By Ezhilarasan BabuFirst Published Nov 26, 2021, 12:28 PM IST
Highlights

எவ்வளவு உயரத்திற்கு வளர்ந்தாலும், வாழ்க்கையில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும், என் அம்மாவின் முகத்தைப் பார்த்ததும் அவள் தரும் ஆறுதலால் இந்த உலகையே வெல்லும் அளவிற்கு என்னுள் வலிமை பிறந்துவிடுகிறது

நான் சோர்ந்து போய் வந்தாலும்... தோற்றுப் போய் வந்தாலும்...என்றுமே எனக்கு ஆதரவு கரமாக என்னம்மா என்ற ஏக்கத்துடன் லட்சக்கணக்கான தொண்டர்களின் தலைவனான திருமாவளவன் தன் தாயின் பாதத்தில் அமர்த்து அவருக்கு கைங்கரியம் செய்யும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இது காண்போர் பலரையும் தாய் பாசத்தில் கரைய வைத்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு அக்காவை பறிகொடுத்துவிட்டு தவித்து வரும் திருமாவளவன் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள தன் தாயின் கலடியில் அமர்ந்துள்ள படம்தான் இது. 

ஆயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டு ஊருக்கு வெளியில் ஒதுக்கப்பட்டு கிடைக்கிற  சேரிகள் தலைநிமிர்வே தன் ஒரே லட்சியம் என அரசியல் பயணத்தை துவக்கி இன்று தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உயர்ந்து நிற்கும் தலைவர் தமிழகத்தில் ஒருவர் உண்டு என்றால் அது திருமாவளவனாகத்தான் இருக்க முடியும். தமிழகத்தை அரைநூற்றாண்டு காலம் ஆட்சி செய்த திராவிட இயக்கத்தின் பன்முகத் தன்மைகொண்ட தலைவராக வாழ்ந்து மறைந்த கலைஞர் கருணாநிதிக்குப் பின்னர் கொள்கையாளர், பேச்சாளர், ஓவியர், கவிஞர், நடிகர், எழுத்தாளர், பத்திரிகையாளர், முன்னாள் அரசு ஊழியர் என பன்முகத் தன்மைக்கு சொந்தக்காரர் திருமாவளவன் என்பதை எவறும் மறுக்க முடியாது.

எத்தனையோ அரசியல்வாதிகள் வருகிறார்கள் போகிறார்கள், ஆனால் அவர்கள் அத்தனை பேரும் வரலாற்றில் இடம் பிடிப்பதில்லை, அத்தனை பேரும் அவ்வளவு எளிதில் நம்மை கடந்து போய் விடுவதுமல்லை. அவர்கள் நம்மில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு போகின்றனர், அப்படி நாம் அனைவரும் எளிதில்  கடக்க முடியாத ஒரு தலைவராக, ஒவ்வொருவர் மனதிலும் நம்பிக்கையோடு போராடு என்ற தாக்கத்தை ஏற்படுத்தியவர் திருமாவளவன் என்றார் மிகையல்ல. சாதாரண ஏழை தலித் குடும்பத்தில் பிறந்து, லட்சக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகளின் ஒப்பற்ற தலைவராக, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தக் கட்சியின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் தனிப்பெரும் இயக்கத்தை உருவாக்கி, வெற்றிகரமான அரசியல் தலைவராக வலம் வருகிறார் திருமாவளவன்.

யார் இந்த திருமாவளவன்..??

 1962-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 தேதி அன்று அன்றைய ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் பிறந்தவர் திருமாவளவன், தந்தை பெயர் ராமசாமி- தாயார் பெரியம்மா, திருமாவளவனின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது, திருமாவளவன் தந்தை ராமசாமி  விறகு வெட்டி விற்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார், உயர் நிலை பள்ளுகூட  இல்லாத உள்ளூரில் பள்ளிப்படிப்பை முடித்த திருமாவளவன் விருதாச்சலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் இலங்கலை முடித்தார். உயர்கல்விக்காக சென்னையை நோக்கி நகர்ந்தார் திருமாவளவன், மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபடத் தொடங்கினார் திருமாவளவன், கலைஞர் கருணாநிதியின் பேச்சால் எழுத்தால் ஈர்க்கப்பட்ட அவர் கல்லூரிப் பருவத்திலேயே திமுக மாணவர் அணியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார், பல தலைவர்களை உருவாக்கிய திமுக மாணவரணி  திருமாவளவன் அரசியலுக்கு அகரம் திட்டியது. 1983ஆம் ஆண்டு ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்தபோது மாணவர்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் இறங்கினார் அது அப்போதே திருமாவளவனை கூர்தீட்டியது. திராவிட இயக்கம் நடத்திய பல போராட்டங்களில் கலந்து கொண்ட அவர் கல்லூரி மாணவராக இருந்தபோதே தமிழ் தேசிய அரசியலில் தீவிரமாக தமிழகத்தில் பேசினார்.

தமிழகத்தில் பல முக்கிய போராட்டங்களில் பங்கெடுத்து, முன்னின்று நடத்திய அவருக்கு தலித் மக்கள் மீட்சிக்காக அரசியலில் அவசியம் என்பதில் உணர்ந்தார். அதேநேரத்தில் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார், பின்னர் தமிழக அரசின் தடைய அறிவியல் துறையில் பணியில் சேர்ந்தார் திருமாவளவன், சென்னை, கோவை, மதுரை என பல்வேறு ஊர்களில் அரசு பணி செய்தார். அத்துடன் அரசியல் பணியும் செய்தார். சாதிய சிக்கலுக்கு பெயர்போன பகுதியாகவே அறியப்படும் மதுரையில் அவர் பணி செய்தபோது,  1988 மதுரையில் நடந்த சாதிக் கலவரங்கள் திருமாவளவனை தீவிர அரசியலுக்குள் இழுத்தது. இளம் வயதிலிருந்தே  தன்னை விரட்டிய சாதியக்  கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. பின்னர் 1989 ஆம் ஆண்டு தலித் பேந்தர் ஆப் இந்தியா என்ற அமைப்பில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார், பின்னர் அந்த அமைப்பின் மாநில அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் திருமாவளவன். ஒரு கட்டத்தில் அரியலூர் மற்றும் தேவகோட்டையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சந்தேகத்தின் பெயரில் திருமாவளவனை போலீசார் கைது செய்தனர்.

திருமாவளவன் கைது  தமிழகத்தில் காட்டுதீயாய் பரவியது.  தலித் பேந்தர் ஆப் இந்தியா என்ற இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தை இயக்கத்தின் பெயர் தமிழகம் முழுவதும் பிரபலம் அடைந்தது. 1990ஆம் ஆண்டு தலித் பேந்தர் ஆப் இந்தியா கொடி அறிமுகம் செய்யப்பட்டது, 1991ஆம் ஆண்டு அமைப்பின் பெயர் விடுதலை சிறுத்தைகள் என மாற்றப்பட்டது. அதுதான் நீலமும், சிவப்பும் இடையில் நட்சத்திரமும் கொண்ட விடுதலை சிறுத்தைகள் கொடியாக இப்போதும் உள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது இருந்த ஈர்ப்பு காரணமாக ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்ற அமைப்பை விடுதலைச்சிறுத்தைகள் என அவர் மாற்றினார். சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அவருடைய நடவடிக்கைகள்  வேகமாகவும், ஒடுக்கப்பட்ட இளைஞர்களை தட்டி எழுப்புவதாகவும் இருந்தது. அப்போதுதான் அடங்க மறு அத்து மீறு திமிறி எழு திருப்பி அடி முழுக்கள்  பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தினார். சாதிய ஆதிக்க ஒடுக்குமுறைகளுக்கு எதிரான விடுதலை சிறுத்தைகள் போராட்டம் தொடர்ந்தது. அவர் நடத்திய பஞ்சமி நில மீட்புப் போராட்டம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

தாழ்த்தப்பட்ட மக்களை அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைக்கு மட்டும் பயன்படுத்துவதாக ஒருகட்டத்தில் குற்றம்சாட்டினார். ஒரு கட்டத்தில் தானே வாக்கு அரசியலில் களமிறங்கினார். திமுக அதிமுக என்று திராவிட கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி, ஒரு சீட்டு, இரண்டு சீட்டு பேரம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருமாறியுள்ளது. அதற்கு திருமாவளவன் வகுத்த கொள்கையும், அவரின் கொள்கையில் உறுதிபாடுமே காரணம் என்றால் அதை எவராலும் மறுக்க முடியாது.


 

திருமாவளவன் குடும்பம்.. 

அரசியல் வெற்றியாளரான திருமாவின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது.  ஐந்து பேர் குடும்பத்தில் இவர் இரண்டாவது பிள்ளை, வான்மதி என்ற அக்கா, செங்குட்டுவன் பாரிவள்ளல் என இரு தம்பிகள் தந்தை இவருக்கு திருமாவளவன் என பெயரிட்டார், தான் படத்து அரசியல் ஆளுமையாக வளர்ந்து தமிழ் மீதும் தமிழ் மொழி மீதும் இருந்த தீராத பற்று காரணமாக ராமசாமி என்ற தன் தந்தையின் பெயரை தொல்காப்பியன் என பெயர் மாற்றினார் திருமாவளவன். பெயர் வைத்த தந்தைக்கே பெயர் மாற்றம் செய்த தலைவர் என சிறுத்தைகள் கொண்டாடி வருகின்றனர்.

எப்போதும் அரசியல் கட்சி, தொண்டர்கள், பொதுக்கூட்டம் என சுற்றி சுழன்று வரும் திருமாவளவனுக்கு குடும்பத்தினருடம் நேரம் செலவிடுவது குறைவுதான். ஆனாலும் அக்கா மீதும், அம்மா மீதும் அவருக்கு என்றும் அலாதிப் பிரியம். சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு  அக்காவையும் பறிகொடுத்து, அவர் தலையில் அடி அடித்து கதறி அழுத காட்சிகளும், அம்மா என்ற அக்கா என்ற தலைப்பில் அவர் பதிவிட்ட கவிதைகளும் அக்காவின் மீது எந்த அளவிற்கு அவர் பாசம் வைத்திருந்தார் என்பதை காட்டியது. அதேபோல் எந்த தாயாக இருந்தாலும் காலாகாலத்தில் மகனுக்கு கல்யாணம் செய்து வைத்து பேரக்குழந்தைகளை பார்த்துவிடவேண்டும் என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

அப்படித்தான் திருமாவளவனின் தாயாருக்கும், மகன் இன்று இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அரசியல் கட்சியின் மாபெரும் தலைவர், லட்சக்கணக்கான விடுதலை சிறுத்தைகளின் ஒப்பற்ற தலைவர், என எத்தனை பெருமைகள் இருந்தாலும் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லையே என்ற இயலாமையில் அவர் படும் வேதனைகளை பலரும் அறிவர். ஊடகவியலாளர்கள் எப்போது அவரிடம் கேட்டாலும், அவர் சொல்லுகிற ஒரே பதில் என் மூச்சு இருக்கும் போதே தம்பி ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டா  நான் நிம்மதியாக கண்மூடி விடுவேன் என்பது தான் அந்தக் பதில். ஏற்கனவே அக்காவை இழந்து தவித்துவரும் நிலையில் தற்போது அவரது தாயாரு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அம்மாவுக்கு டைபாய்டு காய்ச்சல் நேற்றிரவு 4:30 அங்கனூர் சென்று நலம் விசாரித்த தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் முழுமையாக நலம் பெற இன்னும் ஏழு வாரங்கள் ஆகும் எனது அம்மாவை சந்திப்பதை தோழர்கள் தவிர்க்குமாறு வேண்டுகிறேன் எனக்கூறி பதிவிட்டுள்ளார்.

அத்துடன் அவர் தன் தாயின் காலை பிடித்தபடி தரையில் அமர்ந்துள்ள புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். எவ்வளவு உயரத்திற்கு வளர்ந்தாலும், வாழ்க்கையில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும், என் அம்மாவின் முகத்தைப் பார்த்ததும் அவள் தரும் ஆறுதலால் இந்த உலகையே வெல்லும் அளவிற்கு என்னுள் வலிமை பிறந்துவிடுகிறது இதோ என் அம்மாவின் காலடியில் என்பதைப்போல இந்த புகைப்படம் உள்ளது. மிகப் பெரிய கட்சிக்கு தலைவராக இருந்தாலும் தன் தாயின் பாதத்தில் திருமாவளவன் அமர்ந்திருக்கும் இந்த புகைப்படம் பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
 

click me!