Jai Bhim: ஜெய் பீமில் இது சாதி வெறி இல்லையா..? மீண்டும் கொதிக்கும் மாரிதாஸ்..!

By vinoth kumarFirst Published Nov 26, 2021, 12:26 PM IST
Highlights

உண்மைக் கதையில் அனைத்து மக்களும் போராடி, அந்த அநியாயத்திற்கு நீதி வாங்கி கொடுத்த நிலையில் - படத்தில் குறிப்பிட்ட சமூகத்தையே கொடூரமான ஜாதி வெறியர்களாக முத்திரை குத்துவது சமூக அமைதியைக் கெடுக்கும் வேலை இல்லையா?

ஜெய்பீம் படம் உருவாக்கவேண்டிய ஆரோக்கியமான கருத்து விடுத்துச் சாதி சண்டை அல்லவா தூண்டிவிட்டுள்ளது என அரசியல் விமர்சகர் மாரிதாஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து ஜெய் பீம் திரைப்படம் சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. அதே அளவுக்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டதே இந்த சர்ச்சைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இது தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்ட போதிலும் இன்னும் சர்ச்சைகள் ஓயவில்லை. இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது அந்த ஒட்டுமொத்த பழியைப் போட்டு குற்றவாளியாக உருவகப்படுத்துவதும் அநியாயம் இல்லையா? என மாரிதாஸ் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அரசியல் விமர்சகர் மாரிதாஸ் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- ஒடுக்கப்பட்ட மக்கள் , அதன் வரலாறு , அதன் வலி நிச்சயம் பேசப்பட வேண்டிய ஒன்று. அதிலும் அதிகார வர்க்கத்தில் இருந்துக் கொண்டு தொடுக்கப்படும் ஒடுக்குமுறைக்கு எதிரான குரல் வந்தே தீரவேண்டும். அது வெகுஜன மக்களை ஈர்க்கக்கூடிய திரைப்படத்துறையிலிருந்து வருவதென்றால் மகிழ்ச்சியோடு வரவேற்று கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ஒரு புத்தகம் என்ன பாதிப்பை உருவாக்குமோ, அதைவிட சமூகத்தில் பல ஆயிரம் மடங்கு அதிகம் பாதிப்பை உருவாக்கக் கூடிய சக்தி திரைத்துறைக்கு உண்டு.  எனவே இந்த முயற்சி எவர் எடுத்தாலும் வரவேற்பது ஒரு மனிதனின் கடமை.

சமீபத்தில் அந்த விதமான ஒடுக்கப்பட்ட மக்கள் குரலாக ஜெய்பீம் வந்துள்ளது என உங்கள் படக் குழுவினர் பிரச்சாரம் செய்கிறீர்கள். ஆனால் அதில் கடுமையான சச்சரவுகள் கிளம்பிய நிலையில் திடீர் என சூர்யா அவர்களைக் காணவில்லை. இயக்குநர் வந்து விளக்கம் கொடுக்கிறார். ஆனால் அந்த விளக்கம் மேலும் கேலி செய்வது போல் தான் உள்ளது. ஏன் என்றால்: சில ஆதாரங்கள் முன் வைத்து,  பின் கேள்வியை வைப்பது சரி என நினைக்கிறேன். எனவே இதோ சில ஆதாரங்கள் 100.34.15 நிமிடத்தில் இந்த நீதிமன்ற காட்சியில் வரும் காலெண்டர் "Bar Council Of Tamil Nadu And Puducherry" எனத் தெளிவாக உள்ளது. நீதிமன்ற வளாகம் எனவே Bar Council காலெண்டர் வைத்துள்ளனர். சரி. அடுத்து 1.05.00 நிமிடத்தில் வரும் இந்த காட்சியில் ஒரு மெடிக்கல் (மருந்தகம்) வருகிறது. இதில் woodwards gripe water calendar வருகிறது. குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் woodwards gripe water 1995களில் பிரபலம் என்பதால்  இந்த காட்சியில் இந்த காலண்டர் வைத்துள்ளீர்கள். பொருத்தமான அர்த்தமுள்ளதாக உள்ளது. 1.24.00 நிமிடத்தில் மூத்த வழக்கறிஞர் அலுவலகத்தில் காட்சி வைத்துள்ளீர்கள். அதில் நீதிமன்ற சிம்பல் இருக்கக் கூடிய காலண்டர் வைத்துள்ளீர்கள். வழக்கறிஞர் அலுவலகம் என்பதால் நீதியின் குறீயீடுடன் கூடிய காலண்டர் இருப்பதன் பொருள் புரிகிறது. இந்த அலுவலகத்தில் பல காட்சிகள் வருகிறது. 

அனைத்திலும் அதே காலண்டர் தான். 1.33.00 நிமிடத்தில் ஒரு ரைஸ் மில் முதலாளி போனில் பேசும் காட்சி. அதில் பின்புலத்தில் ரைஸ் மில் என்று எழுதப்பட்ட காலண்டர் உள்ளது. அந்த காலகட்ட காலண்டர் மட்டும் அல்ல அருகில் அரிசி மூடை தூக்கும் Hook , கொடை என்று சரியாகப் பின்புலத்தை காட்சிப்படுத்தி இருந்தீர்கள்.1.50நிமிடத்தில் போலீஸ் உயர் அதிகாரி, மக்கள் குறை கேட்கும் கூட்டம்ரு்,  தொண்டு நிறுவனக் கட்டிடத்தில் நடத்துகிற காட்சி. அந்த காட்சியில் குமர விகடன் காலண்டர் வைத்துள்ளீர்கள். இது கல்யாண மண்டபங்கள் ஆரம்பித்து சமுதாயக் கூடங்கள் வரை இருக்கக் கூடிய பொதுவான காலண்டர்.

2.14நிமிடத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் பேசிக் கொள்ளும் காட்சி. அதில் வைக்கப்பட்டுள்ள காலண்டரில் இருக்கும் சின்னம் Indian police service சின்னம். ஆக எந்த இடத்தில் என்ன காலண்டர் வைக்க வேண்டும் என்பதைச் சரியாகத் திட்டமிட்டுள்ளீர்கள். இந்த காட்சி படத்தில் இரண்டு முறைக்கு மேல் வருகிறது. எல்லா முறையும் காலண்டர் சரியாக உள்ளது. இந்த அளவுக்கு ஜெய் பீம் படத்தில் காலண்டர் எங்கே எப்படியான காலண்டர் எந்த Design காலண்டர் வைக்கலாம் எனச் சரியாகத் திட்டமிட்டு வைத்துள்ளீர்கள். அந்த மருந்தகத்திலிருந்த woodwards gripe water காலண்டர் அந்த காலத்து 90களில் இருந்தே அதே காலண்டரின் அதே வடிவம் என்பது வரை கச்சிதமாக வைத்துள்ள நீங்கள் 2.04.00 நிமிடத்தில் வைக்கப்பட்டுள்ள காட்சியில் கொடூரமான ஈவு இரக்கம் இல்லாத ஒரு போலீஸ் வீட்டில் உள்ள காலண்டர் வன்னியச் சமூகத்தைப் பிரதிபலிக்கும் அக்னி கலசம் வைத்தது சரியா? தற்போது அது இந்து கடவுளான லட்சுமி தேவி காலண்டர் மாற்றியுள்ளது அதைவிடத் தவறு இல்லையா?

இன்று ஜெய்பீம் படம் உருவாக்கவேண்டிய ஆரோக்கியமான கருத்து விடுத்துச் சாதி சண்டை அல்லவா தூண்டிவிட்டுள்ளது. இது சூர்யா அவர்களுக்குத் தெரியாமல் நடந்ததா, தெரிந்து நடந்ததா என்பதைத் தாண்டி, இதற்கு சமூகம் அடைந்துள்ள அமைதியின்மைக்கு வருத்தம் தெரிவிப்பதோடு, இதைச் செய்தவர் யார் எனக் கண்டு மன்னிப்பு கேட்டிருந்தால் சமூகம் இவ்வளவு சச்சரவுகளைச் சந்திக்க அவசியம் இல்லையே? அந்த பொறுப்பு சூர்யா அவர்களிடம் உள்ளது தானே! ஒரு சாதாரண காலண்டர் இவ்வளவு செய்யும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை, கவனிக்கவில்லை, தெரியாமல் நடந்துவிட்டது என்று இயக்குநர் சொல்வது, பேச்சுக்கு வேண்டும் என்றால் சொல்லலாமே ஒழிய மேலே படத்தின் அனைத்து காட்சிகளிலும் காலண்டர் சரியாக குறீயிட்டுடன் வைத்தவர்கள் சரியாக போலீஸ் அதிகாரி வீட்டில் கொலை நடந்த நேரத்தில் உச்சக்கட்ட மோசமான மிருகமாக உருவகப்படுத்திப் படக்காட்சி அமைக்கும் அந்த நொடியில், பின்புலத்தில் குறிப்பிட்ட சமூகத்தைக் குறிக்கும் அக்னிகலசம் குறியீடாக வைப்பது எவ்வளவு பெரிய அருவருக்கத்தக்கச் செயல்?

உண்மைக் கதையில் அனைத்து மக்களும் போராடி, அந்த அநியாயத்திற்கு நீதி வாங்கி கொடுத்த நிலையில் - படத்தில் குறிப்பிட்ட சமூகத்தையே கொடூரமான ஜாதி வெறியர்களாக முத்திரை குத்துவது சமூக அமைதியைக் கெடுக்கும் வேலை இல்லையா? ராஜகண்ணு - பார்வதி தம்பதியினருக்கு நடந்தது ஒரு அநியாயம் என்றால் அதை வைத்து, கதையை திரித்து, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது அந்த ஒட்டுமொத்த பழியைப் போட்டு குற்றவாளியாக உருவகப்படுத்துவதும் அநியாயம் இல்லையா? இதற்கு உரிய விளக்கத்தை சூர்யா மற்றும் ஜெய்பீம் படக்குழுவிடம் இருந்து மக்கள் எதிர்பார்க்கிறோம். உரியவர் மன்னிப்பு கோருவது தான் நியாயம் என கருதுகிறேன்.என மாரிதாஸ் தெரிவித்துள்ளார். 

click me!