மேயர், துணை மேயர் பதவிகள் கேட்கும் திருமாவளவன்.. அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்..!

By manimegalai aFirst Published Feb 24, 2022, 2:26 PM IST
Highlights

மேயர், துணை மேயர் பதவிகளை விடுதலை சிறுத்தை கட்சிக்கு வழங்க வேண்டும் என முதலமைச்சரை சந்தித்து திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். 

மேயர், துணை மேயர் பதவிகளை விடுதலை சிறுத்தை கட்சிக்கு வழங்க வேண்டும் என முதலமைச்சரை சந்தித்து திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மிகப் பெரிய அளவிலான வெற்றியை பெற்றது, இந்த தேர்தலில் திமுக மட்டும் தனித்து 60 சதவீத வாக்குகளை பெற்றது. மொத்தமுள்ள 21 மாநகராட்சியையும் கைப்பற்றியுள்ளது. இதேபோல 138 நகராட்சியில் 124 யும் கைப்பற்றியுள்ளது. பேரூராட்சிகளில் திமுக மற்றும்  கூட்டணி கட்சிகள் 70 % இடங்களை கைப்பற்றியுள்ளன. தற்போது அடுத்த கட்டமாக கவுன்சிலர்கள் பதவி ஏற்பு வருகிற  2 ஆம் தேதி  நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து 4ஆம் தேதி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

90 சதவிகித இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் 10 சதவிகித இடங்களுக்கு மட்டுமே போட்டி உள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தங்கள் கட்சிக்கு மேயர் பதிவி ஒதுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்தியுள்ளார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வெற்றி பெற்ற கவுன்சிலர்களையும் கையோடு அழைத்து சென்று மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளை தங்கள் கட்சிக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு துணை மேயர் பதவிகளை தங்களுக்கு வழங்குமாறு கேட்டு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இதனை சற்றும் எதிர்பார்க்காத திமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்த்துள்ளனர். பேரூராட்சி பதவி இடங்களை வேண்டுமென்றால் கொடுக்கலாம் மாநகராட்சியில் பங்கு கொடுப்பது எப்படி சாத்தியப்படும் என திமுக முன்னணி தலைவர்கள் அதிருப்தி தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாகர்கோவில் மற்றும் சிவகாசி  மாநகராட்சி, துணை மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கும்,  திருப்பூர் மாநகராட்சி, துணை மேயர் பதவி இந்திய கம்யூனிஸட் கட்சிக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதே நேரத்தில் தமிழகத்திலுள்ள மொத்தம் 21மாநகராட்சி மேயர் பதவிகளையும்  தன் வசமே வைத்து கொள்ள திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 4 முதல் 6 இடங்கள் வரையிலான மாநகராட்சி துணை மேயர் பதவிகளை மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கலாம் என திமுக தலைமை முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.
 

இந்த நிலையில் மறைமுக மேயர் தேர்தலுக்காக கவுன்சிலர் பட்டியலை இரண்டு நாட்களில் அளிக்குமாறு திமுக தலைமை மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதனையடுத்து மாவட்ட செயலாளர்கள் தங்கள் பகுதியில் வெற்றி பெற்ற மாநகராட்சி கவுன்சிலர்களில் முதல் மூன்று பெயர்கள் கொண்ட பட்டியலை தலைமைக்கு  அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து திமுக தலைமை தேர்வு செய்து அனுப்பும் கவுன்சிலர்களே மேயர் தேர்தலில் போட்டியிடுவர். இதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!