
தி.மு.க.வின் நிலையை ‘க.மு’, ‘க.பி’ என்று பிரித்துவிட்டார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதாவது கருணாநிதிக்கு முன், கருணாநிதிக்கு பின்! என்பதுதான் அது. கருணாநிதிக்கு பிந்தைய தி.மு.க.வில் பல விஷயங்கள் புதிதாக இருக்கும், அதில் ஜனநாயகத்தின் நெடி ரொம்பவே குறைவாக இருக்கும்! என்று முன்பே கணிக்கப்பட்டது இப்போது யதார்த்தமாகி இருக்கிறது! என்கிறார்கள்.
அதற்கு தெள்ளிய உதாரணமாக அவர்கள் சுட்டிக்காட்டுவது, கழகத்தில் பேச்சாளர்களின் பரிதாப நிலையைத்தான். அதாவது பேசிப்பேசியே வளர்ந்த கழகம் தி.மு.க. அண்ணா, கருணாநிதி என்றில்லை அக்கட்சியின் கடைநிலை பேச்சாளர்கள் வரை, ஒரு சோடாவை குடித்துவிட்டு ஒரு இரவு முழுக்க மேடையில் முழங்கியதன் மூலமாக விஸ்வரூபமாய் வளர்ந்தது அந்த கட்சி. அதனால்தான் கழகத்தின் பேச்சாளர்கள் மேல் தனி கரிசனமும், அவர்களுக்கு ஓரளவு வளமான வாழ்க்கையும் கிடைத்திட வழி செய்திருந்தார் கருணாநிதி.
அதாவது, கழகத்தின் பேச்சாளர்களை அந்தந்த மாவட்ட கழகத்தினர் மட்டுமல்லாது மாநில கழகமும் அடிக்கடி அழைத்து மேடைகளில் பேச செய்து அவர்களின் வருவாய்க்கு வழி செய்திட வேண்டும்! எபதே அவரின் உத்தரவு. கருணாநிதி துடிப்போடு இயங்கியது வரையில் இந்த நடைமுறை நன்றாகவே பின்பற்றப்பட்டது. ஆனால் கருணாநிதியின் செயல்பாடுகள் மங்க, மங்க கழக பேச்சாளர்களுக்கான வாய்ப்புகளும் மங்கி இன்று அவர்கள் ஏழ்மை துன்பத்தின் பிடியில் இருக்கிறார்கள் என்கிறார்கள்.
குறிப்பாக தற்போது தி.மு.க.வின் பேச்சாளர்கள் பட்டியலை அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா வெளியிட்டிருக்கிறார். அதிலிருந்து ஆயிரத்தெடுட்டு பஞ்சாயத்துக்களை ஆரம்பித்து அடுக்குகின்றனர் தி.மு.க.வின் பேச்சாளர்கள்...
* சிவாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்னவங்க, அவருக்காக போஸ்டர் ஒட்டியவங்க இவங்களெல்லாம்தான் கழக பேச்சாளர்கள் லிஸ்டில் இணைக்கப்பட்டிருக்காங்க.
* முன்பெல்லாம் கழக பேச்சாளர்களின் பட்டியலை தலைவரும், தளபதியும் தயார் செய்தார்கள். ஆனால் இப்போதோ புதிய தலைவரின் கவனத்துக்கே இந்தப் பட்டியல் போனது போல் தெரியவில்லை.
* கழகத்தின் தலைமை மற்றும் ஸ்டார் பேச்சாளர்கள் தனித்தனி அணிகளாக பிரிந்து கிடப்பதால் ஒற்றுமை இல்லை. உதாரணம், ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி போன்றோர்.
* ஈரோடு சத்தியவதி எனும் பெண் பேச்சாளர்கள் லிஸ்டில் இருக்கிறார். ஆனால் அவர் சமீபத்தில்தான் கட்சியில் இணைந்தாராம். சிவாவுக்கு நெருக்கம் என்பதால் லிஸ்டில் வந்துவிட்டாராம்.
* ஸ்டாலினுக்கு பிடித்த சைதை சாதிக், ஆடுதுறை உத்ராபதி ஆகியோர் கூட லிஸ்டில் இல்லையாம். அப்போ கட்சி தலைவர் ஸ்டாலினை விட பெரிய ஆளா திருச்சி சிவா?
* தலைவரின் புகழ் அஞ்சலி கூட்டங்களில் கழக பேச்சாளர்களை ஒதுக்கிவிட்டு, வெளியிலிருந்து ஆட்களை அழைத்து வந்து பேச வைக்க துரைமுருகனே காரணம்.... என்றெல்லாம் போட்டுத் தாளிக்கின்றனர்.
ஆனால் திருச்சி சிவாவோ “கழக பேச்சாளர்களை மூன்று பிரிவுகளாக பிரித்திருக்கிறோம். கூட்டத்தின் இலக்கு, தன்மைக்கு ஏற்ப பயன்படுத்துகிறோம். எனக்கு நெருக்கமாக இருப்பதால் சிலருக்கு பேச்சாளர் லிஸ்டில் வாய்ப்பு கிடைத்துள்ளது என சொல்வது அபத்தம், அசிங்கம். நான் அப்படியான ஆளில்லை. கழக பேச்சாளர்களை நிச்சயம் சிறப்பாக பயன்படுத்துவோம்.” என்கிறார்.