Omicron: பயப்படாதீங்க.. தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றா? அமைச்சர் மா.சு. சொன்ன முக்கிய தகவல்..!

By vinoth kumarFirst Published Dec 3, 2021, 10:49 AM IST
Highlights

சென்னையில் பிரிட்டனிலிருந்து வந்த  சிறுமி ஒருவருக்கு கொரோனா உறுதியானது. அவருக்கும் மரபியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இருவருக்கும் ஒமிக்ரான் உறுதியானால் அதை  வெளிப்படையாக, அடுத்த விநாடியே தெரிவிப்போம். புதிய ஒமிக்ரான் பாதிப்பு குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். 

11 நாடுகளில் இருந்து மதுரை, கோவை, திருச்சி ஆகிய விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தென்னாபிரிக்காவில் புதிய தொற்று உருவான  மறுநாளே தமிழகத்தில் நடவடிக்கையை தொடங்கிவிட்டோம். தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் குறிப்பிட்ட 11 நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு முதலில் காய்ச்சல் பரிசோதனை அடுத்து ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்டது. அதில் நெகடிவ் வந்தாலும் 7 நாள் அவர்கள் வீட்டுத் தனிமையில் இருப்பதை  உள்ளாட்சி , காவல் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 

விமான நிலையத்தில் நேற்று 1868 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பாதிப்பற்ற நாட்டில் இருந்து வருவோருக்கு ஆர்டிபிசிஆருக்கான 700 ரூபாய் கட்டணத்தை அரசே செலுத்துகிறது. பாதிப்பு இல்லாத நாடுகளில்  இருந்து வருவோர்களில் Random முறையில்  2 சதவீதம்  பேருக்கு பரிசோதனை. வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு புராண உறுதியான அரசு மருத்துவமனையில் இலவசமாக  மருத்துவம் பார்க்கப்படும், ஓமிக்ரானுக்காக 6 மருத்துவமனையில் சிறப்பு படுக்கை வார்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

திருச்சி, சென்னையில் இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவுகிறது. சிங்கப்பூரில் இருந்து வந்த  திருச்சி நபருக்கு கொரோனா உறுதியானது. மேலும் அவருக்கு மரபியல் ரீதியிலான பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. பெங்களூருக்கு அவரது மாதிரியை அனுப்பியுள்ளோம். தற்போது மருத்துவரீதியாக அவருக்கு வெறும் கொரோனா என்றளவில்தான் உள்ளது. 

அதேபோல், வெளிநாட்டிலிருந்து விமானத்தில் வந்த  சென்னையில் பிரிட்டனிலிருந்து வந்த  சிறுமி ஒருவருக்கு கொரோனா உறுதியானது. அவருக்கும் மரபியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இருவருக்கும் ஒமிக்ரான் உறுதியானால் அதை  வெளிப்படையாக, அடுத்த விநாடியே தெரிவிப்போம். புதிய ஒமிக்ரான் பாதிப்பு குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். ஆனால் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாட்டின் அனைத்து பன்னாட்டு விமான நிலையத்திலும் ஒமிக்ரானுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

click me!