
கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது. நகைக்கடை தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்களை சில தகுதியின் கீழ் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் என்ற ஒரு அறிவிப்பை நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதற்கான அரசுக்கு ஏற்படும் இழப்பு என்பது 6000 கோடி ரூபாய் என்பது தெரியவந்தது. அந்த 6000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான அரசாணையும் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து கூட்டுறவு வங்கியிலும் இந்த நகைக்கடன் முறைகேடு புகார் எழுந்ததை தொடர்ந்து அனைத்து கூட்டுறவு வங்கியிலும் ஆய்வு நடைபெற்று வருகிறது.
முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வரும் சூழலில் பொங்கலுக்கு முன்னதாக நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டு அவர்களுடைய நகை அவர்களுடைய கையில் வழங்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை தமிழக அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்டிருக்கக்கூடிய நகைக்கடன்களை இறுதி செய்யும் பணி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மேலும், ஒரு அதிர்ச்சி தகவல்கள் அந்த சுற்றறிக்கையில் இடம் பெற்றுள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ஏற்கனவே 2021ம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும் இந்த நகைக்கடன் தள்ளுபடி என்பது செய்யப்படாது என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. மேலம், நகைக்கடன் தொகையை முழுமையாக செலுத்தியவர்களுக்கும் இந்த தொகை திரும்ப வழங்கப்படாது என்ற ஒரு அறிவிப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது.
40 கிராமிற்கு மேல் நகைக்கடன் பெற்ற குடும்பத்தினர் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் இந்த நகைக்கடன் தள்ளுபடி என்பது செல்லுபடியாகது என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. மேலும் எந்த ஒரு பொருளும் வேண்டாத குடும்ப அட்டை வைத்திருப்போர், குடும்ப அட்டை எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்களுக்கும் இந்த நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படாது என்ற ஒரு அறிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ள சுற்றிக்கை மூலம் தெரியவந்தது.