அவரின் பிறப்பை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை.. ஆ.ராசா தன்னிலை விளக்கம்.

By Ezhilarasan BabuFirst Published Mar 27, 2021, 3:46 PM IST
Highlights

இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரை இதுபோன்ற எடுத்துக்காட்டுடன் ராசா பேசியது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தி உள்ளது.  

நான் பேசிய சில வார்த்தைகளை வெட்டியும், ஒட்டியும் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பப்படுகிறது என  திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமியை இழிவுபடுத்தும் வகையில் ஆ.ராசா பேசியுள்ளதாக அவருக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்து வரும் நிலையில் அவர் இவ்வாறு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.  இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு என்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் திமுக கோட்டை என வர்ணிக்கப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனை ஆதரித்து 26-3-2021 அன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது திமுக தலைவர் மு.க ஸ்டாலினுடன் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பேசிய அவர், ஸ்டாலின் படிப்படியாக வளர்ந்து முதல்வர் வேட்பாளராகவும், நாளைய முதல்வராகவும் வர உள்ளார். அவர் முறையாக பிறந்தவர் என்றும், செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி குறுக்கு வழியில் அதிகாரத்திற்கு வந்தவர், எனவே அவர் கள்ள உறவில் பிறந்தவர் என்றும் விமர்சித்தார். 

இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரை இதுபோன்ற எடுத்துக்காட்டுடன் ராசா பேசியது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ராசாவுக்கு எதிராக  அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ராசாவின்  உருவ பொம்மையை எரித்து அண்ணா தொழிற்சங்கத்தினர் அயனாவரம் சிக்னலில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இதுபோன்ற போராட்டங்கள் மாநிலம் முழுவதும் விரிவடைந்து வருகிறது. இந்நிலையில் தனது பேச்சு குறித்து ஆ.ராசா தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், அதாவது தான் தேர்தல் பரப்புரையின் போது திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் அரசியல் வளர்ச்சியையும், இன்று அவர் அடைந்திருக்கும் இடத்தையும், அதேபோல தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வந்த முறையையும், அடைந்திருக்கும் இடத்தையும்  ஒப்பீடு செய்வதற்காக நான் பேசிய சில வார்த்தைகளை வெட்டியும் ஒட்டியும் அது சமூக வலைதளத்தில் தவறாக பரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. 

அது முற்றிலும் தவறானது.  நான் அவரின் தனிப்பட்ட பிறப்பையும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கில் பேசவில்லை. அப்படி பேச வேண்டும் என்ற எண்ணமும் எனக்கில்லை. அரசியல் ஆளுமையை ஒப்பிட்டு, முறையாக படிப்படியாக வளர்ந்து தலைவராக இருக்கிறார் ஸ்டாலின், எனவே நாங்கள் குறுக்கு வழியில் வரவில்லை என்று சொல்வதற்காக எடப்பாடிபழனிசாமி குறுக்கு வழியில் வந்தவர் என்பதற்காக அப்படி ஒப்பீடு செய்ய வேண்டியிருந்தது. அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஆனால் அதை சிலர் தவறாக புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
 

click me!