
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் இரண்டாக பிளவு பட்டுக் கிடக்கும் அதிமுகவின் இரு அணிகளும் கே.பி.முனுசாமி இருக்கும் வரை இணைவதற்கு வாய்ப்பே இல்லை என கர்நாடக மாநில அதிமுக பொதுச் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், டி.டி.வி.தினகரன் எனும் அனல் தமிழக முழுவதும் சுற்றிசுழன்று வருவதாக தெரிவித்தார்.
தினகரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் கண்டன பொதுக் கூட்டங்களில் கட்டுக்கடங்காமல் பொது மக்கள் கலந்து கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இளைஞர்கள் மத்தியில் டி.டி.வி.தினகரனுக்கு பெரும் செல்வாக்கு இருப்பதாக தெரிவித்த, புகழேந்தி, விரைவில் அவர் சிறையில் இருந்து வெளியே வருவார் என்றும் கூறினார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பணம் வாங்கித்தான் நாஞ்சில் சம்பத் தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் கே.பி..முனுசாமி தனது மகனின் திருமணத்தை ஜெயலலிதாவுக்கு தெரியாமல் திருப்பதியில் நடத்தியதாக குற்றச் சாட்டினார்.
அதே போன்று அதிமுகவில் இருந்து யார் யாரை நீக்க வேண்டும் என கே,பி.முனுசாமி தெரிவிக்க வேண்டியதில்லை என காட்டமாக தெரிவித்தார்.
இந்த முனுசாமி இருக்கும் வரை அதிமுகவின் இரு அணிகளும் ஒரே அணியாக இணைய வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்,