
ஜெயலலிதாவின் மரணத்தை குறித்தோ, அல்லது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தோ பேசுவதற்கும் விமர்சிப்பதற்கும் திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு எவ்வித தகுதியும் இல்லை என புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மரணமடைந்தார். ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் குற்றசாட்டுகளை எழுப்பின.
இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த அறிக்கையை மருத்துவக்குழு தமிழக அரசிடம் வழங்கியது. அந்த அறிக்கையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
அந்த அறிக்கையில், ஜெயலலிதா மரணத்தில் எதிர்கட்சிகள் எழுப்பும் சந்தேகள் ஆதாரமற்றவை என்றும், ஜெயலலிதா வீட்டில் தாக்கப்பட்டார் என்பது பொய்யானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்டாலின் பேசுகையில் எய்ம்ஸ் மருத்துவ குழுவின் அறிக்கை ஜெயலலிதா மரணத்தின் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
மேலும் அப்போலோ வெளியிட்ட அறிக்கைக்கும் எய்ம்ஸ் மருத்துவக்குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கும் முரனபாடுகள் உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில், இதுகுறித்து புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது :
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவ குழு தமிழக அரசிடம் வழங்கியுள்ளது. அதில் திட்டமிட்டு பரப்பப்பட்டு வந்த ஜெயலலிதா மரணத்தின் குற்றசாட்டுகளுக்கு ஆதாரம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓ.பி.எஸ் தரப்பினர் பொய்யான கூற்றை கூறி உண்ணாவிரதம் என்ற பெயரில் பொய்யுரைகளை பரப்பி வருகின்றனர்.
பட்ஜெட் தாக்கல் குறித்த நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. எனவே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என சந்தேகம் உண்டாகியுள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.