இந்தாங்க 25 லட்சம்... கவுன்சிலர் சீட் கொடுங்க... நிர்வாகிகள் முன் பணத்தை கொட்டிய பாஜக தொண்டர்..!

By Asianet TamilFirst Published Jan 10, 2022, 8:56 PM IST
Highlights

 திடீரென, பையில் எடுத்து வந்திருந்த, 500 ரூபாய் கட்டுகளாக, 25 லட்சம் ரூபாயை, நிர்வாகிகள் முன் கொட்டினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சி தேர்தலில், கவுன்சிலராக போட்டியிட பா.ஜ.,வில் 'சீட்' கேட்டவர், நிர்வாகிகள் முன்னிலையில் 25 லட்சம் ரூபாயை கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக பா.ஜ., சார்பில், சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. மூன்றாம் கட்ட நேர்காணல், கோடம்பாக்கத்தில் உள்ள பா.ஜ.,வின் தென்சென்னை அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில், ஆலந்துார், வேளச்சேரி, சோழிங்கநல்லுார், அம்பத்துார், மாதவரம், மதுரவாயல் தொகுதிகளில் உள்ள வார்டுகளில் போட்டியிட மனு அளித்தவர்கள் நேர்காணலுக்கு வந்திருந்தனர்.

அவர்களை தனித்தனியே அழைத்து, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, மாநில பொது செயலர் கரு.நாகராஜன், சென்னை மாநகராட்சி தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.


ஆலந்துார் மண்டலத்தில், 156வது வார்டில் போட்டியிட சீட் கேட்டிருந்த சிவப்பிரகாசம், ''நான் தேர்தலில் 1 கோடி ரூபாய் செலவு செய்யத் தயார்,'' என்றார். திடீரென, பையில் எடுத்து வந்திருந்த, 500 ரூபாய் கட்டுகளாக, 25 லட்சம் ரூபாயை, நிர்வாகிகள் முன் கொட்டினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அவரின் ஆர்வத்தை கண்டு வியந்த நிர்வாகிகள், 'பணத்தை பத்திரமாக எடுத்துச் செல்லுங்கள்' எனக்கூறி அனுப்பி வைத்தனர். நேர்காணலுக்கு வந்த சிலர், 1 கோடி ரூபாய் வரை செலவு செய்வதாகவும் தெரிவித்தனர். பா.ஜ., சார்பில் தேர்தலில் போட்டியிட பலரும் ஆர்வம் காட்டுவது, அக்கட்சி தொண்டர்களிடம் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!