‘நீட்' தேர்வு விலக்கு குறித்து விவாதிக்க இன்று நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க கட்சி தலைவர்களுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி உள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புக்கு நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வரும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கடந்த ஆண்டு செப்.19-ம் தேதி சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பாமலேயே வைத்துள்ளார். இதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரண்டு தரப்பும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மறுத்துள்ளார். இதனால் நாடாளுமன்ற எம்பிக்கள் அதிருப்தியில் உள்ள நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110வது விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின், ‘‘நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, நாம் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டுவதற்கு சட்டப்பேரவையில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை ஜன.8-ம் தேதி நடத்தமுடிவு எடுத்துள்ளோம். அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.
அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், காலை 10:30 மணியளவில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், கூட்டத்தில் கலந்துகொள்ள சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.