
தமிழகத்தில் சிஸ்டம் எல்லாம் நன்றாக இருப்பதாகவும், ஆனால் அதை செயல்படுத்துபவர்கள் தான் சரியில்லை என்றும் தெரிவித்த டி.டி.வி.தினகரன், சிஸ்டம் சரியில்லை என ரஜினி எதை வைத்து கூறுகிறார் என கேள்வி எழுப்பினார்.
நடிகர் ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன்பு தனது ரசிகர்களை முதல் கட்டமாக சந்தித்தார். அப்போதே தனது அரசியல் என்ட்ரி குறித்து தெரிவிப்பார் என மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் அது குறித்து அவர் எதுவும் பேசவில்லை. ஆனால் அப்போது பேசிய ரஜினி, தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என தெரிவித்தார். இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என நடிகர் ரஜினிகாந்த் எதை வைத்து தெரிவித்தார் என கேள்வி எழுப்பினார்.
தமிழகம் முழுவதும் ஜெயலலிதா சிறப்பான ஆட்சியை தந்தார். இங்கு சிஸ்டம் மிக நன்றாகத் தான் உள்ளது, ஆனால் அதை செயல்படுத்துபவர்கள்தான் சரியில்லை என ரஜினிக்கு பதிலடி கொடுத்தார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது யாருக்கும் புரியவில்லை என்றும் தினகரன் தெரிவித்தார்.
கரெக்டா சொல்ல வேண்டும் என்றால், நடிகர் ரஜினிகாந்த்துக்கு எப்படி பேசுவது என்றே தெரியவில்லை என்றும் டி.டி.வி.தினகரன் குறிப்பிட்டார்.