மாநில அரசு முழு சக்தியையும் பயன்படுத்தி ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.. கிருஷ்ணசாமி வலியுறுத்தல்.

Published : May 07, 2021, 11:02 AM IST
மாநில அரசு முழு சக்தியையும் பயன்படுத்தி ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்..  கிருஷ்ணசாமி வலியுறுத்தல்.

சுருக்கம்

தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசியில் 40 சதவீதத்திற்கு மேல் வீணாகியது. கடந்த டிசம்பர் மாதத்திற்குப் பிறகு, முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் அலட்சியப்படுத்தப்பட்டது. 

மாநில அரசு முழு சக்தியையும் பயன்படுத்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் படுக்கை வசதிகள், தட்டுப்பாடற்ற ஆக்ஸிஜன், உரிய மருந்துகள் மற்றும் பிற உதவிகளை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. 

கடமை தவறிய இந்தியத் தேர்தல் ஆணையம், பொறுப்பற்ற இந்திய அரசியல்வாதிகள், பொருத்தமற்ற காலத்தில் நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தல் ஆகியன ஒன்றிணைந்து கட்டுப்பாடுடன் இருந்த கொரோனா பெருந்தொற்றை இப்போது இரண்டாவது அலையாக நாடெங்கும் பரவச் செய்ததால் கொரோனா மக்களை அல்லல் படுத்துகிறது, தினமும் ஆயிரக்கணக்கானோர் செத்து மடிகிறார்கள். இந்த வேதனையை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை? தமிழகத்தில் கடந்த 6 மாதமாக அரசு இயந்திரம் முழு வீச்சுடன் செயல்படாததாலும், முதலமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களும் தேர்தல் பணிகளில் மட்டுமே  முழு கவனத்தையும் செலுத்தியதாலும், தேர்தல் நேரத்தில் எவ்வித கட்டுப்பாட்டையும் கடைபிடிக்கததாலும், தேர்தல் கட்டுப்பாடு என்ற பெயரில் ஒற்றை அதிகாரி செயல்பட்டதாலும் இன்று தமிழகமும் இந்த அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. மிகச் சிரமப்பட்டு அறிவியல் துறையால் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளை உலகெங்கும் முன்னேறிய நாடுகள் அனைத்தும் தங்களுடைய குடிமக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசிகளையும் விரைந்து செலுத்தினர். 

ஆனால் இந்தியாவிலேயே எதற்குதான் மத்திய அரசை எதிர்ப்பது என்ற அடிப்படை அம்சம் கூட இல்லாமல், மிகச் சிறிய பின் விளைவுகளை எல்லாம் பெரிதாக்கி தடுப்பூசிக்கு எதிராகவும்; மக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் கிளப்பினார்கள், அதன் விளைவாகத் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் உருவாகவில்லை. தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசியில் 40 சதவீதத்திற்கு மேல் வீணாகியது. கடந்த டிசம்பர் மாதத்திற்குப் பிறகு, முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் அலட்சியப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக வெகுவாக குறைந்திருந்த கொரோனா முழு வேகம் எடுத்து இப்போது தினமும் 20,000 முதல் 30,000 பேர் வரை நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையை நாடும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்திலும் பெரும்பாலான பெரும் நகரங்களில் உள்ள பெரிய மற்றும் சிறிய மருத்துவமனைகளும் நிரம்பி வழிவதாக செய்திகள் வருகின்றன. அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா படுக்கை வசதிகள் தட்டுப்பாடு  ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழக மக்களிடையே மிகப்பெரிய அச்சமும், பீதியும் உண்டாகி வருகிறது. டெல்லி, உத்திர பிரதேசம் மற்றும் வடக்கு மாநிலங்களை பார்த்து ஒப்பிட்டு பெருமை கொண்டிருந்த தமிழகமும் கொரோனா வலியை உணர ஆரம்பித்து விட்டது. செங்கல்பட்டில் ஆக்ஸிஜன் இல்லாமல் 13 பேர் இறந்திருக்கின்றனர், இது அதிர்ச்சியை எற்படுத்துகிறது. 

அதேபோல்  ரெம்டெசிவர் ஒன்றும் கொரோனாவிற்கு சர்வரோக நிவாரணி அல்ல. எனவே, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலிருந்து மட்டுமே வழங்குவதை நிறுத்தி, தமிழக கொரோனா சிகிச்சை மையங்கள் அனைத்திலும் கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் கொரோனா பதற்றம் ஒவ்வொரு குடிமகனையும் தொற்றி வருகிறது. முறையாகத் திட்டமிடல் இல்லாமலும், கட்டுப்பாடுகள் இல்லாமலும்,  நிதானத்தை இழந்து செயல்பட்டால் மூன்றாவது, நான்காவது அலையாகக் கூட விரிவு பெற்று, தமிழக மக்களை மேலும் வாட்டி வதைக்கக் கூடும். கரோனா தடுப்பு மக்கள் இயக்கம் தொடங்குவதற்கு உண்டான சூழல் இப்போது இல்லை. அது கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பாக தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.  இப்போது மாநில அரசு முழு சக்தியையும் பயன்படுத்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் படுக்கை வசதிகள், தட்டுப்பாடற்ற ஆக்ஸிஜன், உரிய மருந்துகள் மற்றும் பிற உதவிகளையும் வழங்க போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

 

PREV
click me!

Recommended Stories

TVK vs ADMK: விஜய் வெளிச்சத்தில் காணாமல் போகிறதா அதிமுக?! பாஜக செய்யும் வேலையை செய்கிறதா தவெக.! என்ன செய்ய வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி
AIADMK Rift: மன்னிப்பு கடிதம் வழங்கிய எஸ்.பி.வேலுமணி தரப்பு.. சிவி சண்முகம் மிஸ்சிங்