மாமியார் வீட்டிற்கு தீ வைத்த போலீஸ்காரர். குழந்தைகள் சுட்டி டிவி பார்த்ததால் ஆத்திரம். ஆஸ்பத்திரியில் மனைவி.

By Ezhilarasan BabuFirst Published Jan 2, 2021, 2:03 PM IST
Highlights

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்லின் ரிபா, இவருக்கும் குளச்சல் பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்லின் ரிபா, இவருக்கும் குளச்சல் பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆட்லின் ரீபாவின் கணவர், நெல்லை மாவட்டத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். ஆட்லின் ரிபா கடந்த 2 நாட்களுக்கு முன்பு குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்றிரவு மாமியார் வீட்டிற்கு போலீஸ்காரர் வந்தார். அப்போது கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் குழந்தைகள் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து சுட்டி டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். 

இதை தந்தை கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனால் குழந்தைகள் தந்தை சொல்லைக் கேட்காமல் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் மாமியார் வீட்டிற்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். தீ கொழுந்து விட்டு எரிந்ததையடுத்து வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். பின்னர் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீ விபத்தில் வீட்டில் இருந்த துணிமணிகள், கட்டில் மற்றும் மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. 

இது குறித்து தகவல் அறிந்ததும், வடசேரி போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். கணவன் தாக்கியதில் தான் காயமடைந்ததாக கூறி ஆட்லின் ரிபா ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் ஆட்லின் ரிபாவிடம் விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடந்தபோது போலீஸ்காரர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. குழந்தைகள் சுட்டி டிவி பார்த்ததை கண்டித்ததுடன், குடிபோதையில் மாமியார் வீட்டிற்கு போலீஸ்காரர் தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

click me!