காவல் துறையினர் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.. இது மோசமான வன்முறை.. திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு.

By Ezhilarasan BabuFirst Published Jan 28, 2021, 4:31 PM IST
Highlights

போராடும் விவசாய சங்கத்தின் தலைவர்களும் கூட இந்த வன்முறையை கண்டித்துள்ளனர். இதன் பின்னே இருந்த நபர்கள் யார்? அவர்களை இப்படி தூண்டியது யார்? என்பதைப் பற்றி உயர்நீதிமன்றத்தின் பணியில் உள்ள நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

டெல்லியில் விவசாயிகள் மீதான அடக்குமுறையை கண்டித்து குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு செய்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம்:  மத்திய அரசு அனைத்து விதமான நாடாளுமன்ற நடைமுறைகளையும் புறக்கணித்துவிட்டு நிறைவேற்றியுள்ள மக்கள் விரோத வேளாண் சட்டங்கள் மூன்றையும் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கும் மேலாக லட்சக்கணக்கான விவசாயிகள்  டெல்லியின் எல்லைகளில் அறவழியில் போராடி வருகின்றனர். அவர்களது கோரிக்கையை ஏற்காதது மட்டுமின்றி அவர்கள் மீது வன்முறையை ஏவிய மத்திய அரசின் கொடுஞ்செயலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். 

மாநில உரிமைகளுக்கு எதிரான கோடிக்கணக்கான மக்களின்  உணவுப் பாதுகாப்பை பறிக்கிற மத்திய அரசின் ஆணவப் போக்கைக் கண்டித்து நாளை குடியரசு தலைவர் உரையை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடும் குளிரிலும் கொட்டும் மழையிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் மோடி அரசின் வேளாண் விரோத சட்டங்களை ரத்து செய்யக்கோரி கடந்த 64 நாட்களாக போராடி வருகின்றனர். இந்த அறவழிப் போராட்டத்தில் இதுவரை 155 பேர் உயிரிழந்துள்ளனர். அவ்வாறு இருந்தும் மோடி அரசு மனம் இரங்கவில்லை, குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி அமைதியாக நடந்தது அதில் பாஜக ஆதரவாளர்கள் சிலர் உள்ளே புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர் இதனால் காவல்துறையினர் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறைச்  சம்பவங்கள் கண்டிக்கத்தக்கவை. 

போராடும் விவசாய சங்கத்தின் தலைவர்களும் கூட இந்த வன்முறையை கண்டித்துள்ளனர். இதன் பின்னே இருந்த நபர்கள் யார்? அவர்களை இப்படி தூண்டியது யார்? என்பதைப் பற்றி உயர்நீதிமன்றத்தின் பணியில் உள்ள நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

போராடும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் அனைவரையும் பொய் வழக்குகளைப் போட்டு முடக்குவதற்கு பாஜக அரசு முயற்சிக்கிறது. அது கொஞ்சமும் ஏற்கத்தக்கதல்ல. வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்தும் சட்டத்தை இயற்ற வலியுறுத்தியும், போராடுகிற விவசாயிகளுக்கு  ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மத்திய அரசின் அடக்குமுறையை கண்டித்து வகையிலும் நாளையதினம் குடியரசுத் தலைவர் உரையை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!