நகை கொள்ளையனை 24 மணி நேரத்தில் பொறி வைத்து தூக்கிய போலீஸ்.. சிசிடீவி கேமிராவில் சிக்கியதால் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Jan 23, 2021, 12:16 PM IST
Highlights

இதை நோட்டமிட்ட மர்மநபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்து சாவியை எடுத்து வீட்டை திறந்து பீரோவில் இருந்த 7 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளார். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கூலித் தொழிலாளியின் வீட்டில் 7 பவுன் நகை திருடிய இளைஞரை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.  ஸ்ரீவில்லிபுத்தூர் பழையபுது தெருவைச் சேர்ந்தவர் முத்து. இவர் பந்தல் போடும் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்ற பிறகு இவரது தாயார் வீட்டிற்க்கு அருகிலுள்ள கடைக்குச் சென்றுள்ளார். கடைக்கு செல்லும் போது வழக்கம்போல் சாவியை வீட்டின் அருகில் வைத்து விட்டு செல்வார் என கூறப்படுகிறது. 

இதை நோட்டமிட்ட மர்மநபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்து சாவியை எடுத்து வீட்டை திறந்து பீரோவில் இருந்த 7 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளார். இதை அறிந்த முத்து ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டும் தடயவியல் நிபுணர்களை வைத்து தடயங்களை சேகரித்தனர். 

மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கேமராவில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து இருசக்கர வாகனத்தில் வந்து  கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபரை தேடிவந்தனர். இந்நிலையில் 24 மணி நேரத்தில் கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் நகை திருடியதை  ஒப்புக்கொண்டார். அவரிடம் நகையை மீட்ட போலீசார்,  பின்னர் மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கூலித் தொழிலாளியின் வீட்டில் 7 பவுன் நகை திருடிய வாலிபரை 24 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறையினரை இப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

 

click me!