எடப்பாடி தொகுதியில் அடுத்த மக்கள் கிராம சபை... தொடர்ந்து அமைச்சர்கள் தொகுதிக்கு குறி வைக்கும் மு.க. ஸ்டாலின்.!

By Asianet TamilFirst Published Jan 5, 2021, 10:12 PM IST
Highlights

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அடுத்தகட்டமாக எடப்பாடி தொகுதி உள்பட அமைச்சர்களின் தொகுதியில் பங்கேற்கும்  மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கரூர், கோவை, ஈரோடு, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அதிமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்நிலையில் அடுத்தகட்டமாக மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ள மக்கள் கிராம சபை கூட்டம் பற்றி திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் 7-ம் தேதி காலை தருமபுரி மேற்கு மாவட்டம் பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியிலும், அன்றைய தினம் மாலை சேலம் மேற்கு மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியிலும், 8-ம் தேதி காலை நாமக்கல் மேற்கு மாவட்டம் குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியிலும், அன்றைய தினம் மாலை புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியிலும் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெறும்.


9-ம் தேதி காலை மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியிலும், அன்றைய தினம் மாலையில் தேனி வடக்கு மாவட்டம் போடி சட்டபேரவைத் தொகுதியிலும், 10-ம் தேதி காலை சென்னை வடக்கு மாவட்டம் ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியிலும் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெறும்” என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் பங்கேற்கும் அனைத்து மக்கள் கிராம சபைக் கூட்டமும் அமைச்சர்களின் தொகுதியிலேயே நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!