
வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ கழகம் அமைக்கும் மசோதாவை மக்களவையில் நேற்று மத்திய அ ரசு தாக்கல் செய்தது.
இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக கொண்டுவரப்படும் இந்த மசோதாவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தாக்கல் செய்தவுடன் அதை காங்கிரஸ் எம்.பி.க்கள் கடுமையாக எதிர்த்தனர். இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி, விவாதித்து அதன்பின் தாக்கல் செய்யக் கோரினர்.
ஆனால், எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.பி.க்களை மக்களைத் தலைவர் சுமித்ரா மகாஜான் கடிந்து கொண்டார். “நாடாளுமன்ற விதிப்படி செயல்படுங்கள். மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால், முன்கூட்டியே நோட்டீஸ் அளித்து இருக்க வேண்டும்’’ என்றார்.
இந்த மசோதாவை அறிமுகம் செய்து மத்திய அமைச்சர் நட்டா பேசுகையில், “ நிலைக்குழுவின் பரிந்துரைகள், ஆலோசனைகள் அடிப்படையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா மூலம் முக்கியமாக சுய அதிகாரம் பெற்ற 4 வாரியம் அமைக்கப்படும். இந்த வாரியங்கள் இளநிலை, முதுநிலை மருத்துவக்கல்வி படிப்புகளை நடத்துவது, மதிப்பீடு செய்தல், மருத்துவக் கல்விநிலையங்களுக்கு அங்கீகாரம் அளித்தல், மருத்துவர்கள் பயிற்சி பெற பதிவு செய்தல் போன்றவற்றை இந்த வாரியங்கள் செய்யும் என்றார்.
இந்த கமிஷனின் தலைவரையும், உறுப்பினர்களையும் மத்திய அரசு நியமிக்கும். மத்திய அமைச்சரவை செயலாளர் மூலம் வாரியத்தின் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த மசோதாவின்படி, மருத்துவ சேவைசெய்ய செல்லும் மருத்துவர்கள் கண்டிப்பாக பொது நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கூடுதல் எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்க்கைக்கும், புதிய முதுநிலை படிப்பு தொடங்கவும் அனுமதி பெற வேண்டும் என்பது அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.