
தூத்துக்குடி வன்முறையைக் கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வன்முறையைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை மேற்கொள்ள இருந்த நிலையில், விரிவாக்கம் செய்யக் கூடாது என்றும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து மத்திய - மாநில அரசுகள் எந்த நடவடிக்கை எடுக்காத நிலையில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 100
நாட்களாக போராட்டம் நடந்து வரும் நிலையில் போராட்டம் நடத்துவதற்கு 144 தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
தடையை மீறி ஆயிரக்கணக்கான மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று பேரணி சென்றனர். இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். பேரணி சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் போலீசாரின் தடுப்பையும மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அங்கு சென்ற போராட்டக்காரர்கள், ஆட்சியர் அலுவலகத்தின் கண்ணாடிகளை கல் கொண்டு எறிந்து அடித்து நொறுக்கினர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப்பையும் அவர்கள் தாக்கினர்.
4 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெறும் வன்முறையைக் கட்டுப்படுத்த தூத்துக்குடிக்கு கூடுதல் போலீசார் அனுப்பப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. வன்முறையைக் கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.