
டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள எம்.எல்.ஏ. விஜயதரணி, தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
சட்டப்பேரவை செயலாளர் க.பூபதி, இன்று வெளியிட்டுள்ள ஒரே அறிவிப்பின் மூலம், தேர்தலில் போட்டியிட்டு மக்களின் அதிக வாக்கைப் பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிடிவி ஆதரவு 18 எம்எல்ஏக்கள், முதலமைச்சரின் மீது புகார் அளித்ததற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் நேற்றே ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியானது அடிப்படையில், எடப்பாடி முந்திக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஆளுநரிடம், முதலமைச்சர் எடப்பாடி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மனு அளித்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சபாநயகர் தனபாலின் இந்த அறிவிப்பை அடுத்து, இது குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், மீண்டும் அத்தொகுதியில் தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் எம்.எல்.ஏ. விஜயதரணி கூறினார்.